;
Athirady Tamil News

மேல்முறையீடு செய்ய சூரத் செல்லும் முன்பு ராகுல்காந்தியுடன் சோனியா சந்திப்பு!!

0

2019-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல்காந்தி கர்நாடகா மாநிலம் கோலாரில் பேசினார். அப்போது அவர் மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வும், குஜராத் முன்னாள் மந்திரியுமான புர்னேஷ் மோடி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த 23-ந் தேதி தீர்ப்பு விதிக்கப்பட்டது.

மேல் முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டு ஜாமீன் கொடுக்கப்பட்டது. 2 ஆண்டு சிறை தண்டனையை தொடர்ந்து மறுநாளே ராகுல் காந்தியின் மக்களவை எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு ஜெயில் தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி இன்று பிற்பகலில் மேல்முறையீடு செய்கிறார். அவர் சூரத்தில் உள்ள செசன்ஸ் கோர்ட்டில் அப்பீல் செய்கிறார்.

மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்வதற்காக ராகுல்காந்தி இன்று காலை சூரத் புறப்பட்டார். சூரத் புறப்பட்டு செல்வதற்கு முன்பு ராகுல்காந்தியை சோனியாகாந்தி சந்தித்தார். அவரது வீட்டுக்கு நேரில் சென்று சோனியா சந்தித்தார். இதேபோல பிரியங்காவும் ராகுல்காந்தி வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார். ராகுல்காந்தி குஜராத் மாநிலம் சூரத் செசன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய வரும்போது காங்கிரஸ் தலைவர்கள் உடன் செல்வார்கள்.

காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா, ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஷ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகல், இமாச்சலபிரதேச முதல்-மந்திரி சுக்வீந்தர் சிங், மேல்சபை எம்.பி. கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உடன் செல்லலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ராகுல்காந்தி அப்பீல் செய்வதற்காக கோர்ட்டுக்கு வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேல்முறையீடு மனுவில் தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டால் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி நீக்கம் ரத்தாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.