;
Athirady Tamil News

அதானி விவகாரத்தில் பாராளுமன்றம் இன்றும் முடக்கம்!!

0

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கியது. அதானி விவகாரம், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற விவகாரம் மற்றும் ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பு விவகாரம் ஆகியவற்றால் பாராளுமன்றத்தின் இரு அவையிலும் எந்த அலுவல்களும் நடைபெறவில்லை. கூட்டம் தொடங்கியதில் இருந்தே அமளியால் பாதிக்கப்பட்டது. கடந்த 13 நாட்களாக பாராளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. இந்த நிலையில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்றும் அமளி ஏற்பட்டது. நேற்றைய விடுமுறைக்கு பிறகு பாராளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு கூடியது.

சபாநாயகர் ஓம்.பிர்லா இல்லாததால் அவரது இருக்கையில் ராஜேந்திர அகர்வால் இருந்தார். அவை தொடங்கியதுமே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் முழக்கமிட்டனர். அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பினார்கள். சபையின் மைய பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் பதாகைகளும் வைத்து இருந்தனர். கூச்சல்-குழப்பம் காரணமாக அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவை 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. மேல்சபையிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

அதானி குழும முறைகேடு குறித்து கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள். காங்கிரஸ் எம்.பி.க்களில் சிலர் கருப்பு உடை அணிந்து இருந்தனர். தொடர் முழக்கம் காரணமாக அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 2 மணி வரை ஒத்தி வைத்தார். 2 மணிக்கு பின்னர் அவை கூடியதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாளை காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.