;
Athirady Tamil News

உதயன் பத்திரிக்கை நிறுவனத்தினுள் கிறிஸ்தவ சபை ஒன்றை சேர்ந்த கும்பல் புகுந்து அடாவடி! (PHOTOS)

0

யாழ்ப்பாணம் உதயன் பத்திரிக்கை நிறுவனத்தினுள் கிறிஸ்தவ சபையை சேர்ந்த போதகர் தலைமையில் சிறுவர்கள் பெண்கள் உள்ளடங்கிய கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டனர்.

அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் கிறிஸ்தவ மத போதகரின் தலைமையிலான கும்பல் ஒன்று அத்துமீறிநுழைந்து வீட்டில் இருந்த வயோதிப பெண் உள்ளிட்ட இருவர் மீது தாக்குதல் மேற்கொண்டனர் என அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், போதகர் , அவரது மகன் உள்ளிட்ட மூவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.

அது தொடர்பில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உதயன் பத்திரிகையில் செய்தி வெளியாகி இருந்தது.

செய்தி வெளியாகிய நிலையில் அச்சுவேலியில் இருந்து தமது சபைக்கு சொந்தமான சொகுசு பேருந்து மற்றும் பட்டா வாகனம் என்பவற்றில் யாழ்.நகர் பகுதியில் உள்ள உதயன் அலுவலகத்திற்கு வருகை தந்து , அலுவலகத்தினுள் அத்துமீறி நுழைந்து அடவாடியில் ஈடுபட்டதுடன் , நிறுவனத்தில் வேலை செய்தவர்களையும் தமது கையடக்க தொலைபேசிகளில் வீடியோ , புகைப்படங்கள் எடுத்தும் அச்சுறுத்தும் வகையில் ஈடுபட்டனர்.

அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு உதயன் நிறுவனத்தினர் அறிவித்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தர முதல் அக்கும்பல் தமது சொகுசு பேருந்திலும் பட்டா வாகனத்திலும் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.

அதனை அடுத்து உதயன் பத்திரிக்கை நிறுவனத்தினரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.