;
Athirady Tamil News

கா்நாடகத்தில் ரூ.1½ லட்சம் கோடியை கொள்ளையடித்த பா.ஜனதா அரசு: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு !!

0

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி நேற்று சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் மற்றும் மைசூரு மாவட்டம் டி.நரசிப்புராவில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கர்நாடகத்தில் 40 சதவீத கமிஷன் பெறப்படுகிறது. எந்த வெட்கமும் இல்லாமல் இந்த கமிஷன் அரசு உங்களிடம் (மக்களிடம்) கொள்ளையடிக்கிறது. 40 சதவீத கமிஷன் தர முடியாமல் ஒரு ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்டார். கர்நாடக அரசு ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் இதுகுறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர்.

ஆனால் பிரதமர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனெனில் இதில் தவறு செய்தவர்கள் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள். பா.ஜனதா எம்.எல்.ஏ. மகன் வீட்டில் இருந்து ரூ.8 கோடி பணம் சிக்கியது. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு பதிலாக அந்த எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலம் நடத்தினார். கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு ரூ.1½ லட்சம் கோடி கொள்ளையடித்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த பணத்தால் ஏராளமான வளர்ச்சி பணிகளை மேற்கொண்டிருக்க முடியும். இதனால் மக்கள் பயன் அடைந்திருப்பார்கள்.

கர்நாடகத்தில் தற்போது நடைபெறும் பா.ஜனதா அரசு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்ல. பா.ஜனதா வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்தது. துரோகத்தின் பேரில் ஆட்சி அமைத்தனர். கடந்த 4 ஆண்டுகளில் இந்த பா.ஜனதா அரசு எந்த பணிகளையும் செய்யவில்லை. கர்நாடகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதிகளை மத்திய அரசு வழங்கவில்லை. பா.ஜனதா தலைவர் ஒருவர், நீங்கள் பிரதமர் மோடிக்கு ஓட்டு போடாவிட்டால் மோடியின் ஆசி உங்களுக்கு கிடைக்காது என்று மிரட்டல் விடுக்கிறார். மோடியின் ஆசி வேண்டும் என்று கூறியது கர்நாடகத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம் ஆகும்.

பிரதமர் மோடியின் நண்பர் அதானி, அம்பானி ஆகியோர் லட்சக்கணக்கான கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்கள். நிலத்தில் வியர்வை சிந்தும் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பது இல்லை. சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1,100 ஆக உயர்த்திவிட்டனர். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. உங்களின் பணத்தை கொள்ளையடித்து தொழில் அதிபர்களுக்கு வழங்குகிறார்கள். ‘பிரதமர் மோடி கர்நாடகம் வந்து, காங்கிரசார் தனக்கு கல்லறை கட்டுவதாக சொல்கிறார்.

இது எத்தகைய பேச்சு. நமது நாட்டில் வேறு யாரும் இவ்வாறு யோசிக்க மாட்டார்கள். நமது பிரதமரின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். கல்லறை விஷயத்தை முன்வைத்து தேர்தல் நேரத்தில் மோடி பேசுகிறார். இது தான் தேர்தல் விஷயமா?. இவ்வாறு பிரியங்கா காந்தி கூறினார். இதற்கிடையே மைசூரு கிருஷ்ணராஜநகரில் திறந்த வாகனத்தில் நின்றபடி பிரியாங்கா காந்தி பிரசார பேரணி நடத்தினார். அப்போது, தொண்டர்களையும், பொதுமக்களையும் பார்த்து கையசைத்தார். இதில் ஆயிரகணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.