;
Athirady Tamil News

கடிதம் எழுதி வைத்து விட்டு கணவர் இறந்த துக்கத்தில் 2 மகள்களுடன் பெண் தற்கொலை!!

0

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரியை சேர்ந்தவர் சூரிய நாராயணா. தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 55). மகள்கள் சந்திரகலா (33). எம்.பி.ஏ. பட்டதாரி. சவுஜன்யா (29). மாற்றுத்திறனாளி. மகள்கள் இருவருக்கும் திருமணமாகாததால் தனது பெற்றோருடன் வசித்து வந்தனர். இந்த நிலையில் சூரிய நாராயணாவிற்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். படுத்த படுக்கையாக இருந்ததால் வீட்டிற்கு வருமானம் இன்றி பொருளாதார நெருக்கடியால் அவதி அடைந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 16-ந்தேதி சூரிய நாராயணா இறந்தார்.

கணவர் இறந்த துக்கம் தாளாத விஜயலட்சுமி, கணவருக்கு ஈம சடங்குகள் முடிந்தவுடன் தனது 2 மகள்களுடன் அங்குள்ள ரெயில் நிலையத்திற்கு சென்றார். அந்த வழியாக சென்ற ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தனர். ரெயில் நிலையத்தில் இருந்த போலீசார் மற்றும் பயணிகள் தாய், மகள்களை காப்பாற்றி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விஜயலட்சுமி மற்றும் அவரது மகள்கள் வீட்டில் உள்ள அறைகளில் தனித்தனியாக மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். அதிகாலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது விஜயலட்சுமி மற்றும் அவரது 2 மகள்கள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விஜயலட்சுமியின் அறையில் அவர் எழுதிய உருக்கமான கடிதம் கிடைத்தது. போலீசார் கடிதத்தை பறிமுதல் செய்தனர். அதில் எங்களுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. கணவர் இறந்து விட்டதால் மன வேதனையில் தற்கொலை செய்து கொள்கிறோம் என கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.