;
Athirady Tamil News

இந்தியா- அமெரிக்கா இடையேயான பிணைப்பின் அடிப்படை கல்வியாக உள்ளது: ஜில் பைடன்!!

0

அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, ஐ.நா. சபை வளாகத்தில் உள்ள புல்வெளியில் நேற்று பிரமாண்ட யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்கிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் ஐ.நா. உயர் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்திருந்த தூதர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு யோகாசனம் செய்தனர். மேலும், இந்நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, பிரதமர் மோடி நியூயார்க்கில் இருந்து வாஷிங்டனுக்கு புறப்பட்டார். பின்னர், வாஷிங்டன் டிசியில் உள்ள ஆண்ட்ரூஸ் என்ற விமான தளத்திற்கு வந்தடைந்ததும், பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு மற்றும் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது வருகையை குறிக்கும் வகையில் இரு நாட்டு தேசிய கீதங்கள் விமானப்படை தளத்தில் இசைக்கப்பட்டன.

அங்கு பிரதமர் மோடி இரண்டு சிறு குழந்தைகளிடமிருந்து ஒரு பூங்கொத்தை பெற்றார். இதைதொடர்ந்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனை பிரதமர் மோடி சந்தித்தார். இருவரும் வர்ஜீனியாவின் அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள தேசிய அறிவியல் அறக்கட்டளைக்குச் சென்றனர். அங்கு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘எதிர்காலத்திற்கான திறன்’ என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, “ஒருபுறம் அமெரிக்காவில் உயர்தர கல்வி நிறுவனங்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் உள்ளன. மறுபுறம், இந்தியா உலகின் மிகப்பெரிய இளைஞர் தொழிற்சாலையைக் கொண்டுள்ளது. அதனால்தான், இந்தியா-அமெரிக்க கூட்டாண்மை நிலையான மற்றும் உள்ளடக்கிய உலகளாவிய வளர்ச்சியின் இயந்திரமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

பின்னர் ஜில் பைடன் பேசியதாவது:- இந்தியாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பிணைப்பின் அடிப்படைக் கல் கல்வி. நாடுகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து கற்று வளர்கின்றன. தாங்கள் ஆக விரும்பும் மக்களைக் கண்டறிந்து, ஒன்றாக சிறந்த உலகத்தை உருவாக்குகின்றன. ஒன்றாக உழைத்தால், நமது நாடுகள் அனைவருக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான, வளமான எதிர்காலத்தை உருவாக்க முடியும். இரு நாடுகளின் பொருளாதாரம் வலுவாக இருக்க, இந்தியாவும் அமெரிக்காவும் எதிர்கால இளைஞர்களுக்காக முதலீடு செய்ய வேண்டும். பல ஆண்டுகளாக உறவுகளை வலுப்படுத்திய பிறகு, உலகளாவிய சவால்களை நாங்கள் கூட்டாகச் சமாளிப்பதால், அமெரிக்க- இந்திய கூட்டாண்மை ஆழமானது மற்றும் மதிப்புமிக்கது. அனைத்து இந்தியர்களும், குறிப்பாக பெண்கள் கல்வியைத் தொடரவும், அவர்களுக்குத் தேவையான திறன்களைப் பெறவும் வாய்ப்பு இருப்பதை உறுதிசெய்ய நீங்கள் (மோடி) உழைக்கிறீர்கள். நவீன பணியாளர்கள், எங்கள் பள்ளிகள் மற்றும் வணிகங்கள் இங்குள்ள மாணவர்களுக்காக உருவாக்கி வரும் சில புதுமையான திட்டங்களை உங்களுக்குக் காண்பிப்பது உற்சாகமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.