தேசிய ஓய்வூதிய திட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு- அதிகாரிகள் தகவல் !!
கடந்த 2004-ம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜார்கண்ட், ராஜஸ்தான், சத்தீஸ்கர், இமாச்சலபிரதேசம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்தன. இதைத்தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டத்தை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக மத்திய அரசு குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவின் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் தற்போது நடைமுறையில் உள்ள தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மத்திய அரசு இந்த திட்டத்தை பரிசீலனை செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது அமலில் உள்ள தேசிய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதம் மற்றும் அரசு 14 சதவீதம் பங்களிக்க வேண்டும். ஆனால் பழைய ஓய்வூதிய முறையில் ஒரு பணியாளரின் கடைசி ஊதியத்தில் 50 சதவீதம் நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளித்தது.
இந்நிலையில் தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு பல மாநில அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அதில் சில திருத்தங்களை செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி ஊழியர்கள் தாங்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 40 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை ஓய்வூதியமாக பெறும் வகையில் தற்போதைய சட்டத்தை திருத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகவும், இது தொடர்பாக அனைத்து மாநிலங்களுடன் கலந்து பேசி உறுதியான அடிப்படை ஓய்வூதியங்களை வழங்க வாய்ப்பு இருப்பதாகவும், அதே நேரம் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு திரும்பும் திட்டம் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.