;
Athirady Tamil News

காஷ்மீரில் வானிலை சீரடைந்தது.. 3 நாட்களுக்கு பிறகு அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடக்கம்!!

0

ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் மழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது. யாத்திரை தொடங்கிய பக்தர்கள், தங்கள் வழிப்பாதைகளில் முன்னேற முடியாமல் சிக்கித் தவித்தனர். மூன்றாவது நாளாக இன்றும் யாத்திரை தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் இன்று மதியம் வானிலை ஓரளவு சீரடைந்ததையடுத்து யாத்திரை மீண்டும் தொடங்கியது. பஞ்சதர்னி மற்றும் ஷேஷ்நாக் முகாம்களில் இருந்து யாத்திரை தொடங்கியது. குகைக் கோவிலைச் சுற்றி வானம் தெளிவானவுடன், அதிகாரிகள் வாயில்களை திறந்து, அமர்நாத் குகைக்கோயிலுக்குள் சென்று இயற்கையாக உருவாகியிருக்கும் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளித்தனர். ஏற்கனவே தரிசனம் செய்த பக்தர்கள் மீண்டும் பல்டால் முகாமிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், அங்குள்ள சூழ்நிலையை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். இதற்கிடையே, கனமழை காரணமாக சிக்கித் தவித்த 700-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்களை ராணுவத்தினர் அழைத்துச் சென்று அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள காசிகுண்ட் முகாமில் தங்க வைத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.