;
Athirady Tamil News

பருப்பு வகைகள், காய்கறி விலை உயர்வு- ஓட்டல்களில் உணவு பொருட்கள் விலை மீண்டும் உயருகிறது!!

0

தக்காளி, சின்ன வெங்காயம், பீன்ஸ், இஞ்சி, பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் விலை ஏற்றத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் இருந்து ஓட்டல்களும் தப்பவில்லை. ஓட்டல்களுக்கு தேவையான காய்கறிகள், உணவு பொருட்கள் அனைத்தும் விலை உயர்ந்து விட்டதால் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதாக ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 15 நாட்களாக உப்பு தவிர அனைத்து உணவு தானியங்கள், எண்ணெய், பருப்பு வகைகள் விலை கூடியுள்ளதால் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளதால் ஓட்டல் உணவு பண்டங்களில் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

இந்த மாதம் வரை பொருட்களின் விலை உயர்வு குறித்து ஆய்வு செய்த பிறகு இதனால் எவ்வளவு நஷ்டம் ஏற்படுகிறது என்பதை கணக்கிட்டு முடிவு செய்யப்படும் என்று சென்னை ஓட்டல்கள் சங்க தலைவர் ரவி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- காய்கறிகள் மட்டுமல்லாமல் அனைத்து உணவு பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டன. ஒரு மாதம் தாக்குபிடிக்க முடியுமா என்பதே சந்தேகம். தொடர்ந்து எல்லா வகையிலும் ஓட்டல் தொழில் பாதித்து வருகிறது. ஓட்டல்களுக்கு காலை மற்றும் மாலை பீக் அவர்ஸ் என கணக்கிட்டு மின்சார கட்டணம் இந்த மாதம் முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மின்சார கட்டணம் பல மடங்கு அதிகரிக்கும்.

லாரி வாடகை, டீசல் விலை உயர்வே விலை ஏற்றத்துக்கு காரணம். எனவே அரசு ஓட்டல்களுக்கான பீக் அவர்ஸ் மின் கட்டண முறையை ரத்து செய்ய வேண்டும். அப்போது தான் தொழில் செய்ய முடியும். எனவே இந்த மாதம் இறுதி வரை காய்கறிகள், மளிகை பொருட்கள் விலை எவ்வாறு உள்ளது என்பதை பொறுத்துதான் அடுத்த மாதம் ஓட்டல் உணவு பண்டங்களின் விலையை உயர்த்த முடிவு செய்வோம். இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல், பூரி மற்றும் சாப்பாடு ஆகியவற்றின் விலையை மேலும் அதிகப்படுத்தினால் வியாபாரம் பாதிக்கும் என்று கருதுகிறோம். ஆனால் தொடர் விலை உயர்வால் நஷ்டத்தை ஈடு செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.