;
Athirady Tamil News

மலை உச்சியில் சூரிய அஸ்தமனத்தை ரசித்தபடி நிச்சயதார்த்தம்: அடுத்த நொடி பெண்ணிற்கு நிகழ்ந்த சோகம்!!

0

துருக்கி நாட்டில் கடந்த ஜூலை 6-ம் தேதி நடந்த ஒரு துயர சம்பவத்தில் ஒரு பெண், தன் காதலனுடன் நிச்சயம் செய்து கொண்ட சில நிமிடங்களுக்குள் உயிரிழந்தார். 39 வயதான எசிம் டெமிர் எனும் பெண்ணும் நிசாமெட்டின் குர்சு என்பவரும் மணமுடிக்க விரும்பினர். இயற்கையழகுடன் கூடிய ஒரு சிறு மலைவிளிம்பில் நின்று கொண்டு சூரிய அஸ்தமனத்தை ரசித்தபடி நிச்சயதார்த்தம் செய்து கொள்ள இருவரும் விரும்பினர். இதற்காக இருவரும் வடமேற்கு துருக்கியில் உள்ள கனக்காலே (Canakkale) மலை முகட்டிற்கு சென்றனர்.

அங்கு அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சம்பிரதாய விருப்பங்களை தெரிவித்து கொண்டனர். பிறகு இந்நிகழ்வை கொண்டாட நிசாமெட்டின் காரிலிருந்து உணவு வகைகள் மற்றும் பானங்களை கொண்டு வர சென்றார். அப்போது திடீரென ஒரு அலறல் சத்தம் கேட்டு அவர் விரைவாக திரும்பி வந்திருக்கிறார். அங்கு அவருடைய வருங்கால மனைவி மலை உச்சியில் இருந்து தவறி விழுந்திருப்பதை கண்டார். அப்போது எசிம் உயிரோடு இருந்திருக்கிறார். நிசாமெட்டின் உடனடியாக உதவி கோரியிருக்கிறார். விரைந்து வந்த மருத்துவ குழு அவர் உயிரை காக்க போராடியது. ஆனால் பலத்த காயம் அடைந்த எசிம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். “நாங்கள் சந்தோஷத்தை கொண்டாட சிறிது மது அருந்தினோம். அனைத்தும் உடனடியாக நடந்து முடிந்து விட்டது.

அவள் நிலை தடுமாறி 100 அடிக்கு மேற்பட்ட உயரத்தில் இருந்து விழுந்து இறந்தார்” என காதலியை பறி கொடுத்த சோகத்தில் நிசாமெட்டின் தெரிவித்தார். பலர் இந்த இடத்திற்கு இயற்கையழகை ரசிப்பதற்காக வந்து கொண்டிருந்தாலும், அங்குள்ள சாலைகள் மிகவும் மோசம் என்றும் மலை முகட்டின் ஓரங்களில் ஒரு பாதுகாப்பு தடுப்பு கூட இல்லை என்றும் எசிம் டெமிரின் நண்பர்கள் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து தடை செய்யப்பட்டிருந்த இந்த பகுதி, சுற்றுலா பார்வையாளர்களுக்கு ஜூலை 15 அன்று மீண்டும் திறக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.