;
Athirady Tamil News

பச்சிளம் குழந்தையை கவ்விச் சென்ற காட்டுப்பூனை.. கூரையில் இருந்து வீசியதால் உயிரிழந்த சோகம்!!

0

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள புடான் நகரில் காட்டுப் பூனையால் தூக்கிச் செல்லப்பட்ட குழந்தை இறந்த சம்பவம் பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தியது.

இச்சம்பவம் இங்குள்ள உசவான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் நேற்றிரவு நடந்துள்ளது. அக்குழந்தையின் தாய் அஸ்மா, 15 நாட்களுக்கு முன்பு கவுத்ரா பட்டி பௌனி கிராமத்தில், அல்ஷிஃபா மற்றும் ரிஹான் என பெயரிடப்பட்ட இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். இரட்டை குழந்தைகள் பிறந்ததில் இருந்து தினமும் வீட்டில் பூனை ஒன்று காணப்பட்டதாகவும், ஆனால் உஷாரான குடும்பத்தினர் அதை விரட்டி வந்ததாகவும் அஸ்மாவின் கணவர் ஹசன் காவல்துறையினரிடம் தெரிவித்தார். நேற்றிரவு, அஸ்மாவுக்கு அருகில் குழந்தை ரிஹான் தூங்கி கொண்டிருந்திருக்கிறான். அப்போது ரிஹானை பூனை கவ்விக் கொண்டு சென்றது.

இதனை கண்ட தாய் அஸ்மா எழுந்து கூக்குரலிட்டார். உடனே ஹசன் தன் குழந்தையை காப்பாற்ற அந்த பூனையை துரத்திக் கொண்டு ஓடினார். அப்போது வீட்டின் கூரை மேல் ஓடிய அந்த பூனை, குழந்தை ரிஹானை கீழே போட்டு விட்டு ஓடி விட்டது. கூரையிலிருந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே குழந்தை ரிஹான் உயிரிழந்தான். இச்சம்பவத்தை உறுதி செய்த காவல்துறையினர், இவ்விவகாரத்தில் குழந்தையின் குடும்பத்தினர் இதுவரை புகார் ஏதும் கொடுக்கவில்லை என கூறினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.