;
Athirady Tamil News

இந்த ஒருமுறை மட்டும்தான்.. அமலாக்கத்துறை இயக்குநரின் பணிக்காலத்தை செப்.15 வரை நீட்டித்த உச்ச நீதிமன்றம்!!

0

அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவிற்கு பணி நீட்டிப்பு வழங்க அனுமதிக்க கோரி மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அக்டோபர் 15ம் தேதிவரை பதவி நீட்டிப்பு வழங்க அனுமதிக்கும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் பிஆர் கவாய், விக்ரம் நாத் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே. மிஸ்ராவின் பணிக்காலத்தை செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர்.

இனி பதவி நீட்டிப்பு கிடையாது என்றும் திட்டவட்டமாக கூறினர். முன்னதாக வழக்கு விசாரணையின்போது, அமலாக்கத்துறையில் எஸ்.கே மிஸ்ரா மட்டுமே தகுதி வாய்ந்த நபரா, வேறு ஆளே இல்லையா? இப்படி செய்வது துறை முழுக்க திறமையற்றவர்கள் என சொல்வதுபோல் இருக்காதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். செப்டம்பர் 15 ஆம் தேதி நள்ளிரவு மிஸ்ராவின் பதவிக் காலம் நிறைவு அடைந்ததாக கருதப்படும் என்றும் தெரிவித்தனர். அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலம் நிறைவடைந்த பிறகு 3 முறை அவருக்கு மத்திய அரசு பதவி நீட்டிப்பு வழங்கி உள்ளது. அவர் 2018 நவம்பர் 19ம் தேதி அமலாக்கத்துறை இயக்குனர் பதவியில் நியமிக்கப்பட்டார். இந்த பதவி 2 ஆண்டுகள் வகிக்கக்கூடியது.

அவரது பதவிக்காலம் முடிந்தபின் 2020 நவம்பர் 13ம் தேதி மேலும் ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்பின்னர் 2021 நவம்பர் மாதம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு வழங்கியது. அதோடு இனிமேல் அமலாக்கத்துறை, சிபிஐ இயக்குனர் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என்று மத்திய அரசு திருத்தி அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மத்தியப் பிரதேச மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயா தாக்கூர், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவிற்கு 3வது முறையாக பதவி நீட்டிப்பு வழங்கியதை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும் நீட்டிக்கப்பட்ட காலமான 2023 நவம்பர் மாதத்தில் இருந்து குறைத்து, ஜூலை 31 வரை பதவியில் நீடிக்க கெடு விதித்தனர். அதன்பின்னரும், பணி நீட்டிப்பு வழங்க அனுமதிக்க கோரி மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இன்று பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.