;
Athirady Tamil News

திருப்பதி கோவிலில் 2 பிரம்மோற்சவம்: புரட்டாசி சனிக்கிழமை வி.ஐ.பி. தரிசனம் ரத்து!!

0

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந் தேதியிலிருந்து 26-ந் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவம், அக்டோபர் மாதம் 15-ந் தேதியிலிருந்து 23-ந் தேதி வரை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் நவராத்திரி பிரம்மோற்சவம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் முன்கூட்டியே தொடங்கியுள்ளனர். செப்டம்பர் மாதம் 18-ந் தேதி வருடாந்திர பிரமோற்சவ கொடியேற்ற விழா நடக்கிறது. அதே நாளில் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார். 22-ந் தேதி கருட சேவை 23-ம் தேதி தங்க தேரோட்டம் 25-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதேபோல நவராத்திரி பிரம்மோற்சவ விழா அக்டோபர் மாதம் 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 19-ந் தேதி கருட சேவை நடக்கிறது.

இதனைத் தொடர்ந்து புரட்டாசி மாதம் வருகிறது. புரட்டாசி மாதத்தில் ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் சாமி தரிசனத்திற்காக வருவார்கள். குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளில் கோவிலில் கூட்டம் அலைமோதும். 2 பிரம்மோற்சவம் மற்றும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விஐபி தரிசனம் மற்றும் சிபாரிசு கடிதங்களை ஏற்க திருப்பதி தேவஸ்தானம் மறுத்துள்ளது. அன்றைய நாட்களில் இலவச தரிசனம் மட்டுமே அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். மாதந்தோறும் நடைபெறும் பவுர்ணமி கருட சேவை இன்று இரவு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறுகிறது. இதனை ஒட்டி திருப்பதியில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.