;
Athirady Tamil News

கருவாடு உற்பத்தியாளர்களுக்கும் நட்டஈடு!!

0

நீர்கொழும்பு பகுதியில் கருவாடு உற்பத்தியில் ஈடுபடுகின்றவர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (05.09.2023) கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றது.

இச் சந்திப்பின்போது, தாங்கள் நீர்கொழும்பு களப்பு மற்றும் கடற்கரையை அண்டிய பகுதிகளில் கருவாடு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாகவும், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து காரணமாக தங்களது தொழிலுக்கும் பாதிப்பு மற்றும் இழப்பு ஏற்பட்டதாகவும், கப்பல் விபத்து காரணமாக கடற்கரையில் கருவாடு உலர வைக்கும் நடவடிக்கைகள் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் அதனால் தமது பொருளாதரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும், இவை தொடர்பாக அவதானம் செலுத்தி தங்களுக்கும் நட்டஈடு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கடற்றொழில் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.

கருவாடு உற்பத்தியாளர்கள் தரப்பில் முன் வைக்கப்பட்ட கருத்துக்களை கேட்டறிந்த கடற்றொழில் அமைச்சர், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈடுகள் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருவதை சுட்டிக் காட்டியதுடன், கடற்றொழில் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டவர்களுக்கும் நட்டஈட்டினை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த வகையில் கருவாட்டு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் அவர்கள் எதிர்கொண்ட பாதிப்பு தொடர்பில் ஆராய்ந்து அவற்றுக்கான நட்டஈடு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.