;
Athirady Tamil News

புதிதாக பொறுப்பேற்ற வட மாகாண கடற்படைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு

0
புதிதாகப் பொறுப்பேற்ற வட மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் MDK. விஜேவர்த்தன அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்  மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்று (12.08.2026) பிற்பகல் 2.00 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது, புதிதாகப் பொறுப்பேற்ற வட மாகாண கடற்படைத் தளபதியை அரசாங்க அதிபர் வரவேற்றதுடன், அவரது பதவிக்காலத்தில் மாவட்ட மக்களின் நலனுக்காகத் தேவையான ஒத்துழைப்பையும் சேவையையும் வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக, தீவகப் பகுதிகளுக்கான சீரான கடல் போக்குவரத்துக்கு ஒத்துழைப்பு வழங்கல் குறிப்பாக நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு உள்ளிட்ட தீவுகளுக்கான பயணிகள் கடல் போக்குவரத்தை மேம்படுத்துதல், தீவகப் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்குத் தேவையான மூலப்பொருட்களை தடையின்றி கொண்டு செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அரசாங்க அதிபர் கவனம் செலுத்தினார்.

மேலும், இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் மற்றும் மயிலிட்டித் துறைமுகப் பகுதியில் காணப்படும் இந்திய மீன்பிடிப் படகுகளை அப்புறப்படுத்துதல் தொடர்பிலும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் வட மாகாண கடற்படைத் தளபதியிடம் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த வட மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் MDK. விஜேவர்த்தன, பொதுமக்களின் கடல் போக்குவரத்துத் தேவைகளுக்கு கடற்படையினால் வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் சிறந்த முறையில் மேற்கொள்வதுடன், மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்ந்தும் முழுமையான ஒத்துழைப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்தார்.

மேலும், சந்திப்பின் நிறைவில், வட மாகாண கடற்படைத் தளபதி அவர்களால் அரசாங்க அதிபருக்கு நினைவுச் சின்னமொன்று வழங்கப்பட்டது.

இச் சந்திப்பில் மேலதிக அரசாங்க அதிபர்  கே. சிவகரன், பிரதம கணக்காளர்  எஸ். கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர்  இ. சுரேந்திரநாதன், உதவி மாவட்டச் செயலாளர்   உ. தர்ஷினி மற்றும் கடற்படையின் Flag Lieutenant PKA Maduranga ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 
You might also like

Leave A Reply

Your email address will not be published.