;
Athirady Tamil News

லிபியா வெள்ளத்தில் 20,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்!!!

0

லிபியாவில் சுனாமி போன்ற வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். 20 ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என டேர்னா நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.

கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்களை மீட்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். கடலுக்குள் இருந்து மேன்மேலும் சடலங்கள் வெளியேறிக் கொண்டே இருக்கின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று டேர்னா நகரில் டேனியல் புயல் தாக்கியபோது 2 அணைகளும் 4 பாலங்களும் இடிந்து நகரின் பெரும்பகுதி நீரில் மூழ்கிவிட்டன.

எகிப்து உட்பட சில அண்டை நாடுகளில் இருந்து சில உதவிகள் வரத் தொடங்கியுள்ளன, ஆனால் லிபியாவின் அரசியல் சூழ்நிலையால் மீட்பு முயற்சிகள் தடைபட்டுள்ளன. நாட்டில் இரண்டு போட்டி அரசாங்கங்கங்கள் ஆட்சி செய்து வருவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஜெர்மனி, ஈரான், இத்தாலி, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் உதவிகளை அனுப்புவதாகக் கூறியுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை இரவில் பதிவுசெய்யப்பட்ட வீடியோ காட்சிகளில் நகரத்தின் வழியாக வெள்ளத்தின் நதி ஓடுவதைக் பார்க்க முடிகிறது. வெள்ளத்தில் ஏராளமான கார்கள் மிதந்து சென்றன.

ஏராளமான மக்கள் கடலுக்குள் அடித்துச் சென்ற கொடூரமான சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன. மற்றவர்கள் வீட்டின் மேல் தளங்களிலும் மொட்டை மாடிகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.

“நான் பார்த்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன், இது ஒரு சுனாமி போன்றது” என்று லிபியாவின் கிழக்குப் பகுதி அரசைச் சேர்ந்த ஹிஷாம் சிகியோவாட் கூறினார்.

டேர்னாவின் தெற்கே உள்ள அணைகளில் ஒன்று உடைந்ததால் விழுந்ததால் நகரின் பெரும் பகுதிகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டதாக அவர் பிபிசியிடம் கூறினார்.

“ஒரு பெரிய ஊர் அழிந்துவிட்டது – ஒவ்வொரு மணி நேரமும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது”

டேர்னாவின் பெரும்பகுதியில் எஞ்சியிருப்பது இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளும் வெள்ளத்தில் இறந்தவர்களின் உடல்களும் மட்டுமே என்று கிழக்கு நகரத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

அணைகள் இடிந்து விழும் சத்தம் விமானத் தாக்குதல் அல்லது கடும் துப்பாக்கிச் சூடு போன்று கேட்டதாக தாஹா முஃப்தா கூறினார்.

“இப்போது தண்ணீர் நின்றுவிட்டது. மேலும் எஞ்சியிருப்பது இடிபாடுகள் மட்டுமே. தண்ணீருக்கு அடியில் இருப்பது வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட மக்கள் மட்டுமே.” என்றார் அவர்.

டேர்னாவின் கிழக்குப் பகுதியில் வசிக்கும் அதிர்ஷ்டசாலி என்று அவர் தன்னைக் கூறுகிறார். இந்தப் பகுதி ஒரு மலையின் மீது உள்ளது. அதனால் மோசமான வெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்பட்டது.

“மீட்புப் பணியாளர்கள் தங்களால் இயன்றதைச் செய்கிறார்கள், தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். ஆனால் பேரழிவின் அளவைச் சமாளிக்கத் தேவையான உபகரணங்களும் அனுபவமும் அவர்களிடம் இல்லை.” என்கிறார் அவர்.

2011 ஆம் ஆண்டு முதல் அணைகள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர், ஆனால் “யாரும் அதைப் பற்றி எதுவும் செய்யவில்லை” என்று அவர் மேலும் கூறினார்.

சேதம் காரணமாக நகரத்திற்குள் நுழையும் பெரும்பாலான முக்கிய பாதைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன

கிழக்கு லிபிய நகரமான டேர்னாவில் இந்த வெள்ளம் மிகவும் பேரழிவை ஏற்படுத்திய காரணிகளை நாம் கவனித்து வருகிறோம்.

குடும்பங்கள் தூங்கும் போது சுனாமி போன்ற ஒரு பெரிய வெள்ளம் கடலை நோக்கி மக்களை அடித்துச் சென்றிருக்கிறது.

லிபியாவின் மத்திய தரைக்கடல் கடற்கரை முழுவதும் வீசிய புயல் காரணமாக கனமழை பெய்தது. இது சாதாரண மழை அல்லை. செப்டம்பர் மாதம் முழுவதும் நாடு பொதுவாகப் பெறும் 1.5 மிமீ மழையுடன் ஒப்பிடுகையில், 24 மணி நேரத்திற்குள் சில பகுதிகளில் 400 மிமீ வரை மழை பெய்திருக்கிறது.

இந்த அசாதாரண வெள்ளம், நகரின் வழியாக ஓடும் டேர்னா ஆற்றின் இரண்டு முக்கிய அணைகளை உடைத்தது. பல முக்கிய பாலங்களையும் சிதறடித்தது.

நகரம் தண்ணீரில் மூழ்குவதற்கு முன்பு ஒரு பெரிய வெடி சத்தம் கேட்டதாகவும், வெள்ளம் கிட்டத்தட்ட 10 அடி உயரத்துக்கு வந்ததாகவும் தப்பி வந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

உடல்களை மீட்க மீட்புக் குழுக்கள் போராடி வருவதாகவும், கடற்படை மற்றும் நீர்மூழ்கிக் மீட்புக் குழுவினர் கடலில் இருந்து உடல்களை மீட்க முயற்சித்து வருவதாகவும் அல்-திபீபா கூறினார்.

பேய்டா நகரத்தில் உள்ள உதவிப் பணியாளரான காசிம் அல்-கதானி,, “சேதம் காரணமாக நகரத்திற்குள் நுழையும் பெரும்பாலான முக்கிய பாதைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன என்பதால் மீட்புப் பணியாளர்கள் டேர்னாவை அடைவது கடினம்.” என்று பிபிசியிடம் கூறினார்.

“வெள்ளம் ஏன் இத்தகைய பேரழிவை ஏற்படுத்தியது என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது, டேர்னா மற்றும் கிழக்கு நகரமான பெங்காசியை மீண்டும் கட்டியெழுப்ப ரூ.4,500 கோடி வழங்கப்படும்” என்று அவர் கூறினார்.

சௌசா, அல்-மர்ஜ், மிஸ்ரட்டா ஆகிய நகரங்களும் ஞாயிற்றுக்கிழமை புயலால் பாதிக்கப்பட்டன.

பெங்காசிக்கு கிழக்கே கடற்கரையோரம் 250 கிமீ தொலைவில் உள்ள டேர்னா, வளமான ஜபல் அக்தர் பகுதியின் அருகிலுள்ள மலைகளால் சூழப்பட்டுள்ளது.

டேர்னா நகரத்திலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ள மேல் அணை முதலில் உடைந்தது. அதன் நீரை இரண்டாவது அணையை நோக்கி அனுப்பியதாக நீர் பொறியியல் வல்லுநர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். இந்த அணை டேர்னாவுக்கு அருகில் உள்ளது. .

“முதலில் நாங்கள் கனமழை என்று நினைத்தோம், ஆனால் நள்ளிரவில் ஒரு பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டது, அது அணை உடைந்தது,” என்று தனது மனைவி மகளுடன் உயிர் பிழைத்த ராஜா சசி என்பவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

பெங்காசிக்கு கிழக்கே கடற்கரையோரம் 250 கிமீ தொலைவில் உள்ள டேர்னா, வளமான ஜபல் அக்தர் பகுதியின் அருகிலுள்ள மலைகளால் சூழப்பட்டுள்ளது.

கடாபியின் வீழ்ச்சிக்குப் பிறகு, லிபியாவில் ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களின் கட்டுப்பாட்டில் இந்த நகரம் இருந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, கிழக்கு அரசு நிர்வாகத்துடன் தொடர்புடைய கலீஃபா ஹப்தாருக்கு விசுவாசமான படைகளால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.