நயினாதீவில் இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு; அவதியில் பக்தர்கள்!
வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா மிக விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில், நயினாதீவில் இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு காரணமாக ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் பிரதேசவாசிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
கடந்த இரு நாள்களாக இரவு நேரங்களில் அதிக நேர மின்வெட்டு நடைமுறையில் இருந்து வருகின்றதாக கூறப்படுகின்றது.
இரவு நேரங்களில் அதிக நேர மின்வெட்டு
நயினாதீவு பெருந்திருவிழா காலத்தில் எவ்வித தடையுமின்றி 24 மணித்தியாலமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு முற்றிலும் மாறாக, தற்பொழுது நாளாந்தம் பல தடவைகள் மின்சார சபையினால் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றதாக ஆலயம் செல்லும் பக்தர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை நயினாதீவு பெருந்திருவிழாவை முன்னிட்டு உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி நயினாதீவுக்கு வருகை தருகின்றனர்.
இவ்வாறானதொரு மக்கள் நெரிசல் மிக்க சூழலில், இரவு நேரங்களில் மின்சாரம் தடைப்படுவது பெரும் விசனத்தை தோற்றுவித்துள்ளது.மின்வெட்டைச் சாதகமாகப் பயன்படுத்திபக்தர்களின் நகைகள் மற்றும் உடைமைகள் திருடப்படும் சம்பவங்களும், அசம்பாவிதங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே தீவுப்பகுதிக்கான பாதுகாப்பு மற்றும் பக்தர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, மின்சார சபை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.