;
Athirady Tamil News

யாழ். மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் இரண்டாம் காலாண்டு கூட்டம்: அரசாங்க அதிபர் பிரதீபன் தலைமையில் முக்கிய முடிவுகள்!

0

யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் இரண்டாம் காலாண்டு குழுக் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (26.06.2026) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் அரசாங்க அதிபர் அவர்களினால் பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

1. பாடசாலை இடைவிலகல் மற்றும் மீளிணைப்பு செயல்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு 69 மாணவர்கள் பாடசாலை இடைவிலகள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று அதில் 60 மாணவர்கள் மீளிணைப்பு செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டு
இடைவிலகிய மாணவர்களின் குடும்பச் சூழல் பொருளாதார சூழல் காரணிகளை கிராம மட்ட உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

2. சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 59 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும் இவை தொடர்பாக பிரதேச மட்ட ரீதியா மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டு பிரதேச செயலாளர் தலைமையில் சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் இடை விலைகள் தொடர்பாக உரிய தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்

3.பிரதேச மட்ட ரீதியாக ஆராயப்பட்ட சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்தும் பிரதேச மட்ட சிறுவர் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு
தெளிவுபடுத்துவதற்கான ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்யுமாறு இதன்போது அரசாங்க அதிபரினால் மாவட்ட உத்தியோகத்திற்கு பணிக்கப்பட்டது.

4.பிறப்பு அத்தாட்சி பத்திரம் இல்லாத சிறுவர்களுக்கு பிறப்பு அத்தாட்சி பாத்திரத்தை பெற்று கொடுப்பதற்கான நடமாடும் சேவையினை எதிர்வரும் ஜூலை மாத இறுதிக்குள் மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.

மேலும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற 204 முறைப்பாடுகளில்
ஒவ்வொரு பிரதேச செயலாளர்களினாலும் தீர்க்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் அடுத்த காலாண்டு கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என்றும் பிரதேச செயலாளர்களுக்கு தெரிவித்ததோடு பெண்களுக்கெதிரான பால்நிலை சார் வன்முறைகளை குறைப்பதற்கான இரண்டாம் காலாண்டுக்கான வேலை திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு
ஒரு மாவட்டத்தினுடைய மிக முக்கியமான கூட்டம் இதுவெனவும் ஒரு பிரதேசத்திற்கு பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்கள் சிறுவர் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனவும் அதற்குரிய பொறுப்பினை ஏற்றுக் கொள்ள வேண்டுமெனவும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு உங்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டியதோடு எல்லோருடைய நோக்கமும் ஒன்று ஆனால் ஒவ்வொருவருடைய செயற்பாடுகளுமே வேறுபடுகின்றன என்றும் இதற்கு எல்லோருடைய ஒத்துழைப்பும் அவசியம் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.