;
Athirady Tamil News

வெனிசுலா நிலநடுக்கம்; செல்போனில் முன்கூட்டிய வந்த எச்சரிக்கை… பல உயிர்களை காத்த கூகுள் தொழில்நுட்பம்

0

நிலநடுக்கம்
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் இன்று காலை ரிக்டர் 7.2 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஒரு சில நிமிடங்களில் 2-வது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானது. இந்த 2 நிலநடுக்கங்களும் வெனிசுலாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக பயங்கரமான நிலநடுக்கங்கள் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அவசர நிலை
2 பயங்கர நிலநடுக்கங்களை தொடர்ந்து, சுமார் 20 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து மோசமான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நிலவரத்தின் தீவிரம் கருதி வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அந்நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அறிவித்துள்ளார்.

மீட்புப் பணிகள்
இதுவரை வெளியான தகவல்களின்படி, வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 164 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 971 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

முன்கூட்டிய வந்த எச்சரிக்கை
இதற்கிடையில், நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பே வெனிசுலாவில் லட்சக்கணக்கான மக்களுக்கு அவர்களது செல்போன்களில் நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கை வந்துள்ளது. நிலநடுக்கம் ஏற்படுவதற்கு ஒரு சில வினாடிகளுக்கு முன்பு இந்த எச்சரிக்கை வந்துள்ளது. இருப்பினும் அந்த சிறிய கால அவகாசத்தில் பலர் உஷாராகி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். கூகுள் நிறுவனத்தின் இந்த தொழில்நுட்பம் பல உயிர்களை காப்பாற்றியுள்ளது.

கூகுள் தொழில்நுட்பம்
ஆண்ட்ராய்டு செல்போன்களில் கூகுள் நிறுவனத்தின் ‘நிலநடுக்க எச்சரிக்கை அமைப்பு’ என்ற தொழில்நுட்பம் உள்ளது. இது ஆரம்பகட்ட நில அதிர்வுகளை கண்டறிந்து எச்சரிக்கைகளை அனுப்புகிறது. இதனை ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் செல்போனில் உள்ள செட்டிங்ஸ்(Settings) பகுதிக்கு சென்று பாதுகாப்பு மற்றும் அவசரநிலை(Safety & Emergency) என்பதை தேர்வு செய்து, நிலநடுக்க எச்சரிக்கையை(Earthquake Alerts) ஆன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த தொழில்நுட்பம் நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிப்பதில்லை. ஆனால், ஆரம்பகட்ட நில அதிர்வுகளை கண்டறிந்து, அந்த பகுதியில் உள்ள பயனர்களை எச்சரிக்கை செய்கிறது. இந்த தொழில்நுட்பம், மிகச்சிறிய நில அதிர்வுகளை கண்டறியக்கூடிய சென்சார்களைக் கொண்ட லட்சக்கணக்கான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை சார்ந்து இயங்குகிறது. இது போன்ற தொழில்நுட்பங்கள் மேலும் வளர்ச்சி அடையும் பட்சத்தில் எதிர்காலத்தில் இயற்கை பேரிடர்களின்போது மனித உயிர்களை காப்பது எளிதாகலாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.