;
Athirady Tamil News

இந்தியா நிலவுக்கு சென்றுவிட்டது, நாம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம் – நவாஸ் ஷெரீப் தாக்கு!!

0

பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் தற்காலிக பிரதமராக பலூசிஸ்தான் எம்.பி. அன்வர் உல் ஹக் ககர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்காலிக பிரதமராக அன்வர் உல் ஹக் ககர் செயல்பட்டு வரும் நிலையில் பாகிஸ்தானின் நிதி நிலைமை மோசமடைந்து வருகிறது. நிதி நிலைமையை சமாளிக்க பெட்ரோல் டீசல் மீதான வரி மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 26 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 17 ரூபாயும் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் 305 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது கூடுதல் வரியுடன் சேர்த்து பெட்ரோல் ஒரு லிட்டர் 331 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு லிட்டர் டீசல் 329 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பாகிஸ்தான் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர். இதற்கிடையே, ஊழல் வழக்குகளில் சிக்கி நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் வசித்து வரும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிடுவதற்காக அக்டோபர் 21-ம் தேதி நாடு திரும்புவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், லண்டனில் இருந்தபடி காணொலி வாயிலாக தனது கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டதில் நவாஸ் ஷெரீப் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசுகையில், பாகிஸ்தானின் பொருளாதாரம் கடந்த பல ஆண்டுகளாக வீழ்ச்சி நிலையில் சென்று கொண்டிருக்கிறது. நிலவில் தடம் பதித்தும், ஜி 20 மாநாட்டினை தலைமை ஏற்று நடத்தியும் இந்தியா எங்கோ சென்றுவிட்டது. நாம் உலக நாடுகளிடம் கையேந்தி பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம். இந்தியா செய்துள்ள சாதனைகளை பாகிஸ்தானால் ஏன் செய்ய முடியவில்லை? வரும் தேர்தலில் நம் கட்சி பெரும்பான்மை பெற்று, மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.