;
Athirady Tamil News

பள்ளி மைதானங்களில் குழந்தைகளுக்கு போர் பயிற்சி: ரஷியாவிற்கு வலுக்கும் கண்டனம்!!

0

கடந்த பிப்ரவரியில் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் தீவிரமாக போரிட்டு வருகிறது. போர் 575 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போரில் வெற்றி பெற இரு தரப்பும் பல்வேறு வழிகளை கடைபிடித்து வருகிறது. இதில் ஒன்றாக ரஷியா, தன் நாட்டு பள்ளிகளில் குழந்தைகளையும் மறைமுகமாக போரில் ஈடுபடுத்த தயார்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷியாவில் பரவலாக அனைத்து இடைநிலைக்கு மேற்பட்ட பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு பதுங்கு குழி தோண்டுவது, கையெறி குண்டு வீசுவது, துப்பாக்கியை கையாளுதல் உட்பட பல போர்திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. நாட்டிற்காக தியாகம் செய்வதை பாராட்டும் விதமாக பள்ளி கல்வியில் பாடதிட்டங்கள் மாற்றப்பட்டிருக்கிறது. பெரும் பொருட்செலவில் இதில் ரஷியா ஈடுபட்டு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயிற்சி கூடங்களையும் அமைத்துள்ளது. உக்ரைன் போர், தேசப்பற்று மற்றும் ராணுவ பற்று ஆகியவை பாடத்திட்டங்களில் புதியதாக சேர்க்கப்பட்டிருக்கிறது.

பயிற்சிகளுக்கு மாணவ மாணவியர் தாங்களாகவே வர மறுத்தாலும், அரசாங்கத்தால் வற்புறுத்தப்படுகிறார்கள். உயர்நிலை பள்ளிகளில் மாணவர்கள் துப்பாக்கியை பயன்படுத்துவதற்கும், தானியங்கி துப்பாக்கிகளை கையாளுவதற்கும், பிரித்து கோர்ப்பதற்கும் கைதேர்ந்த நிபுணர்களால் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். மேலும், பள்ளி குழந்தைகள் போர் வீரர்கள் அணியும் உடை மற்றும் தொப்பி ஆகியவற்றை தைத்து தரவும் பயிற்சிகள் நடக்கிறது. இன்றைய குழந்தைகளை எதிர்கால ரஷிய போர் வீரர்களாக கட்டாயபடுத்தி மாற்ற முயல்வதற்கு சமூக வலைதளங்களில் பயனர்கள் அந்நாட்டிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.