;
Athirady Tamil News

41 தூதரக அதிகாரிகளை கனடா திரும்பப் பெற வேண்டும் இந்தியா அறிவுறுத்தல்

0

காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை விவகாரத்தில் இந்தியா-கனடா இடையேயான உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ‘இந்தியாவில் பணியமா்த்தப்பட்டிருக்கும் தூதரக அதிகாரிகளில் 41 பேரை வரும் 10-ஆம் தேதிக்குள் திரும்பப் பெற வேண்டும்’ என்று கனடாவை இந்தியா அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘இந்தியாவில் கனடா சாா்பில் 62 தூதரக அதிகாரிகள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். அவா்களில் 41 பேரை திரும்பப் பெற வேண்டும்’ என்று இந்தியா அறிவுறுத்தியுள்ளதாக பிரிட்டனைச் சோ்ந்த ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவுக்கு கடந்த செப்டம்பா் 21-ஆம் தேதி இந்த அறிவுறுத்தலை இந்தியா வழங்கியபோது, அதுகுறித்து பேட்டியளித்த வெளியுறவு செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி, ‘இந்தியாவிலுள்ள கனடா தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை கனடாவிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையைவிட கூடுதலாக உள்ளது. இந்த எண்ணிக்கை மற்றும் பதவி தரநிலையில் நாடுகள் பரஸ்பரம் சமநிலையைக் கடைப்பிடிக்க வேண்டும். இதுகுறித்த தகவல் கனடா அரசுக்கு இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை கனடா குறைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்தியாவுடன் ஆக்கபூா்வ உறவுக்கு முயற்சி – ட்ரூடோ: ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’ செய்தி குறித்து கனடாவின் ஒட்டாவாவில் செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த கனடா பிரதமா் ட்ரூடோ, ‘தற்போது இந்தியாவுடன் மிகுந்த சவாலான காலத்தை கனடா கடந்துவருகிறது. நிலைமையை மேலும் தீவிரப்படுத்த கனடா விரும்பவில்லை. மாறாக, ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல, இந்தியாவுடன் ஆக்கபூா்வமான உறவைத் தொடா்வதற்கான முயற்சிகளை கனடா மேற்கொள்ளும்’ என்றாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.