;
Athirady Tamil News

தனுஷ்கோடி – இராமேஸ்வரம் பகுதிகளில் குவியும் பிளமிங்கோ பறவைகள்

0

தனுஷ்கோடி மற்றும் இராமேஸ்வரம் பகுதிகளில் சுமார் 40 நாட்களுக்கு பின் காலதாமதமாக பிளமிங்கோ பறவைகள் குவிந்துள்ளன.

கடல் மாசுபாடு மற்றும் கடல் நீர் தரம் குறைவதால் பறவைகளின் வருகை குறைந்து வருவதாக பறவைகள் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கமைய கோதண்ட ராமர் கோயில் கடற்கரைப்பகுதி அருகே அமைந்துள்ள கடல் நீர் மற்றும் மழைநீர் தேங்கும் பகுதிக்கு ஐரோப்பிய கண்டத்தில் இருந்து பிளமிங்கோ பறவைகள் வருடந்தோறும் டிசம்பர் மாதம் இறுதி முதல் ஜனவரி மாத இறுதி வரை உணவு தேடி வந்து செல்லும் .

உணவு தேடும் அரிய காட்சி
இங்குள்ள சதுப்பு நிலப்பகுதியில் வாழும் கடல் வாழ் உயிரினங்களை உணவாகக் கொண்டு வாழ்ந்து வருவதோடு பெப்ரவரி தொடக்கத்தில் தமிழகத்தில் உள்ள சரணலாயங்களுக்கு செல்லும்.

எனினும், இந்தாண்டு சுமார் 40 நாட்கள் கால தாமதமாக வந்துள்ளதாக பறவைகள் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

மேலும், இப்பறவைகள் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து இராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் பறவைகள் உணவு தேடும் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.

இந்நிலையில், பருவநிலை மாற்றம் மற்றும் சமூக விரோதிகள் வேட்டையாடி வந்ததால் கடந்த இரண்டு வருடங்களாக பிளமிங்கோ பறவைகள் வருவது தடைப்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து வந்த நிலையில் இந்தாண்டு வலசை வரும் பறவைகள் கடந்த சில நாட்களாக வந்த வண்ணம் உள்ளன.

நீர் மாசுபாடு
மேலும், பிளமிங்கோ பறவைகள் ஆண்டுதோறும் ஒரு வார காலம் இங்கு வலசை வருவதற்கான முக்கிய காரணம் பறவைகளுக்கு தேவையான உணவுக்காக மட்டுமே.

இந்தாண்டு கால தாமதமாக வந்ததற்கு நீர் மாசுபாடு மற்றும் இராமேஸ்வர பகுதியிலிருந்து வெளியேறும் கழிவு நீர் கடலில் கலப்பதால் தண்ணீரின் பி .எச் .அளவு குறைந்தால் பறவைகள் உண்ணக்கூடிய பாசி வகைகள் உற்பத்தி ஆகாததால் வலசை வரும் பிளமிங்கோ பறவைகளின் எண்ணிக்கை கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு குறைந்துள்ளது.

இதன்படி தனுஷ்கோடி சுற்றுலா தளமாகவும், ஆன்மீக தலமாகவும் மட்டுமே மக்கள் பார்த்து வரும் நிலையில் பல்லுயிர் பெருக்கத்திற்கான முக்கிய இடமாக இருப்பதால் அதனை பாதுகாத்தால் மீன்களின் வளம் பெருகி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் அதிகரிக்கும்.

எனவே இந்த பகுதியை பாதுகாக்க மக்கள் வனத்துறையுடன் இணைந்து கடலில் நீர் மாசுபடுவதையும் தடுக்க வேண்டும் என பறவைகள் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.