கூகுளுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்: அதிரடியாக 28 பேரை பணி நீக்கம் செய்த நிறுவனம்
![](https://www.athirady.com/wp-content/uploads/2024/04/Screenshot-2024-04-18-195712-750x430.jpg)
இஸ்ரேலுடனான கூகுளின் 1.2 பில்லியன் டொலர்(Dollar) மதிப்பீட்டில் புராஜெக்ட் நிம்பஸ்(Project Nimbus) என்கிற ஒப்பந்தத்திற்கு எதிராக கூகுள்(Google) ஊழியர்கள் சுமார் 28 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் அரசு மற்றும் இஸ்ரேல் இராணுவத்துக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் சேவைகளை வழங்குவதற்காக அமேசான் நிறுவனத்துடன்(Amazon Company) கூகுள் நிறுவனம் கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதனடிப்படையில் நியூயார்க் மற்றும் சன்னிவேல் அலுவலங்களில் சுமார் எட்டு மணி நேரத்துக்கும் மேலாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள்
கூகுள் கிளவுட் சிஇஓ தாமஸ் குரியனின்(Google Cloud CEO Thomas Kurian) அலுவலகத்தை விட்டு அகல மறுத்து ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 28 ஊழியர்களை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளதுடன் இது தொடர்பாக அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடையூறு
குறித்த அறிக்கையில், “மற்ற ஊழியர்களை வேலை செய்யவிடாமல் இடையூறு செய்வது மற்றும் அலுவலகத்திற்குள் வர விடாமல் தடுப்பது நிறுவன கொள்கைகளை மீறும் செயலாகும்.
இந்த செயல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது அதனால் போராட்டம் செய்தவர்களை அலுவலக வளாகத்தை விட்டு வெளியேறும்படி பலமுறை கூறியும் கேட்கவில்லை.
இதனால் விசாரணைக்கு பிறகு 28 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.