;
Athirady Tamil News

சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்: வேட்பாளர்களின் எண்ணிக்கையில் முதல்முறை ஏற்பட்ட மாற்றம்

0

ஜனாதிபதி தேர்தலின் சூடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கையும் 7 ஆக அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, திலித் ஜயவீர, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, ஜனாதிபதி தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் தொழிலதிபர் ஜனக ரத்நாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் பேரன் இஷான் ஜயவர்தன ஆகியோர் போட்டியிட தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் பதில் தலைவரும், நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சருமான கலாநிதி விஜயதாச ராஜபக்ச அண்மையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ச எதிர்வரும் சில வாரங்களில் கோரிக்கை தொடர்பான தனது முடிவை அறிவிப்பதாக நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும்,

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

மேலும் வேட்பாளர்கள் இணையவுள்ளதாக தகவல்

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது கட்சியின் மே தினக் கூட்டத்தில் அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதித் தேர்தலில் மேலும் பல வேட்பாளர்கள் இணையவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் குறிப்பிடுகின்றன.

ஜனாதிபதித் தேர்தலுக்கு அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்களின் பெயர்கள் முன்வைக்கப்படுவது இதுவே முதல் முறை எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.