;
Athirady Tamil News

நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் வேலைநிறுத்தம்

0

அனைத்துப் பல்கலைக் கழகங்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று (02.05.2024) நண்பகலில் இருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

கடந்த (29.04.2024) திகதியிடப்பட்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் இந்த வேலைநிறுத்தப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சனைகளிற்கு உரிய கால அவகாசங்கள் வழங்கப்பட்டும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசாங்கமும் இதுவரை தீர்வினை வழங்காமையினால் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உடனடித் தீர்வினை வேண்டியும் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலும் 02.05.2024 வியாழன் நண்பகலில் இருந்து தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தினை பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மேற்கொள்ளவிருக்கின்றது.

எனவே பாதுகாப்பு பணியாளர்கள் தவிர்ந்த அனைத்து அங்கத்தவர்களும் குறித்த காலப்பகுதியில் பணியிடங்களுக்குச் செல்லாது விடுவதுடன், 02.05.2024 நண்பகல் 12 மணிக்கு பணியிடங்களிலிருந்து கையொப்பமிட்டு வெளியேறி இராமநாதன் மண்டப முன்றலில் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதோடு, 12 மணிக்கு நடைபெறும் விளக்கப்பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக முன்றலில் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பயிலுநர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், மனிதவலு நிறுவனப் பணியாளர்கள் ஆகியோரும் எமது போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக எமக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக ஊழியர் சங்க இணைச் செயலாளர் த.சிவரூபன் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.