;
Athirady Tamil News

தமிழரசு கட்சியால் பிற்போடப்பப்ட்ட கலந்துரையாடல்

0

தமிழரசு கட்சியின் முடிவுக்காக , தமிழ் தேசிய கட்சிகளின் கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்ணணியின் ஏற்பாட்டில் , தமிழ் தேசிய கட்சிகளுடனான கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட இருந்தது. அந்நிலையில் தமிழரசு கட்சி தமக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு கிடைக்கவில்லை என தெரிவித்தது.

அதனை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் செயலாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லவராச கஜேந்திரன் ஆகியோர் , தமிழரசு கட்சியின் பதில் தலைவரும் , வடமாகாண சபையின் அவைத்தலைவருமான சி.வீ.கே சிவஞானத்தின் வீட்டிற்கு நேரில் சென்று கலந்துரையிடலுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் , இன்றைய தினம் திங்கட்கிழமை கலந்துரையிடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் தமது கட்சி சார்பில் இன்றைய கலந்துரையாடலில் கலந்து கொள்ள முடியாது எனவும், எதிர்வரும் 08ஆம் திகதி தமிழரசின் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளதால் , கலந்துரையாடல் தொடர்பில் கூட்டத்தில் முடிவெடுத்து , அதன் பிரகாரம் எமது கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிக்க முடியும் என கூறியுள்ளார்.

இது தொடர்பில் இன்றைய தினம் கலந்துரையாடலுக்கு சமூகமளிக்க இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் , சிவஞானம் சிறிதரன் ஆகியோருக்கு கஜேந்திரகுமார் தெரிவித்ததை அடுத்து , 08ஆம் திகதி தமிழரசு கட்சி தனது முடிவினை அறிவித்த பின்னர் , கலந்துரையாடலை மேற்கொள்வோம் என கூறியுள்ளதால் , இன்றைய தினம் நடைபெறவிருந்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.