மகா கும்பமேளா: வசந்த பஞ்சமியையொட்டி 1.25 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்!

உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில் முக்கிய நாளான வசந்த பஞ்சமி புனித நீராடல் இன்று(பிப். 3) நடைபெறுகிறது. வசந்த பஞ்சமி மற்றும் அதற்கு முந்தைய இருநாள்களிலும் புனித நீராடல் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பக்தர்களால் கருதப்படுகிறது.
இதையொட்டி, மக்கள் கூட்டம் கடந்த இரு நாள்களாக வழக்கத்தைவிட அதிகரித்துக் காணப்படுகிறது. லட்சக்கணக்கான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடலுக்காகத் திரண்டுள்ளனர்.
அந்த வகையில், கடந்த இருநாள்களையும் சேர்த்து இன்று(பிப். 3) மாலை வரையிலான நிலவரப்படி, இதுவரை ஒரு கோடியே 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புனித நீராடியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வசந்த பஞ்சமியை முன்னிட்டு திங்கள்கிழமை ஒரேநாளில்(காலை 8 மணி நிலவரப்படி) 62.25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புனித நீராடினர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 35 கோடிக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனா்.
மகா கும்பமேளா நிறைவடைய இன்னும் 23 நாள்கள் உள்ள நிலையில், மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடலில் பங்கேற்கும் பக்தர்கள் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது