;
Athirady Tamil News

ஹரியாணா காங்கிரஸ் பெண் தொண்டர் கொல்லப்பட்ட அன்று என்ன நடந்தது?

0

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஹிமானி நர்வாலுடன், கொலையாளி சச்சின், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் நட்பாகியிருக்கிறார். கடந்த ஆறு முதல் ஏழு மாதங்களாக தனியாக வசித்து வந்த ஹிமானி வீட்டுக்கு அவ்வப்போது சச்சின் வந்து சென்றுள்ளார்.

அதுபோல பிப். 27ஆம் தேதி இரவு 9 மணிக்கு சச்சின் ஹிமானி வீட்டுக்கு வந்துள்ளார். அன்று இரவு அவர் அங்கு தங்கியிருந்த நிலையில்தான், மறுநாள் காலை இருவருக்கும் இடையே இதுவரை வெளிவராத விஷயத்துக்காக சண்டை ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில், சச்சின் ஒரு துப்பட்டாவால் ஹிமானி கையை கட்டி, மொபைல் சார்ஜரால் கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஹரியாணாவைச் சேர்ந்த காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி கொலை வழக்கில் கைதான சச்சின், ஏற்கனவே திருமணமானவர் என்றும், ஜஜ்ஜார் மாவட்டத்தில் மொபைல் கடை நடத்தி வந்தவர் என்றும் காவல்துறை விசாரணையில் நேற்று தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஹிமானி நர்வால் கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள சச்சினை திங்கள்கிழமை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்தான், மொபைல் சார்ஜர் மூலம் ஹிமானியைக் கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், சம்பவம் நடந்தது பற்றி சச்சின் கூறியதாக வெளியான தகவலில், பிப். 27 அன்று இரவு ஹிமானி வீட்டுக்கு சச்சின் வந்துள்ளார். மறுநாள் காலை இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. மொபைல் சார்ஜரைக் கொண்டு சச்சின், ஹிமானி கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார்.

பிறகு, அவரது நகை, செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு, ஹிமானியின் ஸ்கூட்டரில் தனது மொபைல் கடைக்கு வந்து அனைத்தையும் வைத்துவிட்டு மீண்டும் ஹிமானி வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த சூட்கேசில், ஹிமானி உடலை வைத்து, அதனை ஆட்டோ மூலம் தில்லி பைபாஸ் சாலைக்கு பிப்.28ஆம் தேதி இரவு கொண்டுவந்துள்ளார். பிறகு, சூட்கேசுடன் பேருந்தில் ஏறி, சம்ப்லா பேருந்து நிலையம் வந்து இறங்கி, சற்று தூரம் நடந்து சென்று சூட்கேஸை வீசிவிட்டுச் சென்றிருக்கிறார்.

கொலைக் குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டிருப்பதையும், இருவருக்குள்ளும் பணப்பரிமாற்றம் நடந்திருப்பதையும் காவல்துறையினர் உறுதி செய்திருக்கிறார்கள். கைதான சச்சின் கையில் கடித்த அடையாளம் இருப்பது குறித்து காவல்துறையினர் கேட்டபோது, ஹிமானி, தன்னைத் தற்காத்துக் கொள்ள போராடிய போது கடித்ததாகவும் கூறியிருக்கிறார்.

ஆனால், இவர்களுக்குள் எந்த விவகாரத்தில் சண்டை ஏற்பட்டது என்பது குறித்தும், பணப்பரிமாற்றம் நடந்தது ஏன் என்பது குறித்தும் இதுவரை தகவல் வெளியாகவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.