;
Athirady Tamil News

24 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய நபர் மரணம்!

0

24 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் (வயது 88),14 வயது சிறுவனாக இருந்தபோது அவரது நெஞ்சுப் பகுதியில் முக்கிய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அந்த அறுவைச் சிகிச்சைக்காக பிறரது ரத்தம் அவருக்கு தானமாக வழங்கப்பட்டதினால், தானும் வளர்ந்தவுடன் ரத்த தானம் வழங்குவதாக உறுதி மொழி எடுத்துக்கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 1954 ஆம் ஆண்டு தனது 18 ஆம் வயதில் ரத்த தானம் வழங்கத்துவங்கியபோது அவரது ரத்தத்தில் அறியவகை ’ஆண்டி டி’ எனும் நோய் எதிர்ப்பாற்றல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் எதிர்ப்பாற்றலானது கர்ப்பிணி பெண்களின் கருவிலுள்ள குழந்தைக்கு தாயிடமிருந்து வரும் ஆபத்தான ஆண்டிபாடிகளை தடுக்கும் எனக் கூறப்படுகிறது. இதனையறிந்த ஹாரிசன் அன்று முதல் தனது வாழ்நாள் முழுவதும் ரத்த தானம் வழங்குவதை வழக்கமாக்கிக் கொண்டார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு தனது 81ஆம் வயதில் ரத்த தானம் வழங்குவதிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்ட ஹாரிசன் அதுவரை 1,173 முறை ரத்த தானம் வழங்கியுள்ளார். அதன்மூலம், சர்வதேச அளவில் அவர் சுமார் 24 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், 2005 ஆண்டு முதல் உலகிலேயே அதிகளவிலான ரத்த பிளாஸ்மாக்களை வழங்கிய சாதனைப் பட்டத்தை இவர் தக்கவைத்திருந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அமெரிக்க நபர் ஒருவர் இந்த சாதனையை முறியடித்தார்.

இந்நிலையில், ‘எ மேன் வித் கோல்டன் ஆர்ம்’ அதாவது தங்கக் கரம் கொண்ட மனிதர் என வர்ணிக்கப்பட்ட ஹாரிசன் கடந்த பிப்ரவரி 17 அன்று ஆஸ்திரேலியாவின் சௌத் வேல்ஸ் நகரத்தில் தனது 88 ஆம் வயதில் மரணமடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் நேற்று முன்தினம் (மார்ச்.3) தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ஆஸ்திரேலிய செஞ்சிலுவை இயக்கத்துடன் இணைந்து அந்நாட்டு ஆய்வாளர்கள் ஹாரிசனின் ரத்ததில் இயற்கையாகவே இருந்த நோய் எதிர்ப்பாற்றலை செயற்கை முறையில் ஆய்வகத்தில் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.