மணிப்பூரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

மணிப்பூரில் அடுத்தடுத்த இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில்,
மணிப்பூரில் இன்று காலை 11.06 மணிக்கு 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் மையப்பகுதி இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள யெய்ரிபோக்கிலிருந்து கிழக்கே 44 கி.மீ தொலைவிலும், 110 கி.மீ ஆழத்திலும் இருந்தது.
மேலும், இந்த நில அதிர்வானது அஸ்ஸாம், மேகாலயா உள்பட பிற பகுதிகளில் உணரப்பட்டதாக ஷில்லாங்கில் உள்ள மண்டல நில அதிர்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன்பின்னர், பிற்பகல் 12.20 மணிக்கு 4.1 ரிக்டர் அளவிலான இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது மாநிலத்தின் கம்ஜோங் மாவட்டத்தில் 66 கி.மீ ஆழத்தில் தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மணிப்பூரில் பல கட்டடங்களில் விரிசல்கள் காணப்பட்டன.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட விடியோக்களில், தௌபல் மாவட்டத்தில் உள்ள வாங்ஜிங் லாம்டிங்கில் உள்ள ஒரு பள்ளி கட்டடத்தில் விரிசல்கள் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அங்கு இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண முகாம் நடத்தப்பட்டது.
மணிப்பூரில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.