சமூக வலைத்தள கணக்குகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் – புதிய வருமான வரி மசோதா

புதிய வருமான வரி மசோதா, ஈமெயில், சமூக வலைத்தள கணக்குகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்குகிறது.
புதிய வருமான வரி மசோதா
சமீபத்தில் இந்திய பாராளுமன்றத்தில் 2025 புதிய வருமான வரி மசோதாவை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவானது, வரி ஏய்ப்பு செய்ததாக சந்தேகிக்கும் நபரின், மின்னஞ்சல், சமூக வலைத்தள கணக்குகள், வங்கி கணக்கு, உள்ளிட்டவற்றை அணுகுவதற்கான அதிகாரத்தை அதிகாரிகளுக்கு வழங்குகிறது.
தற்போதுள்ள சட்டத்தின் படி, சாவி கிடைக்காத பட்சத்தில் கதவு, பாதுகாப்பு பெட்டகம் ஆகியவற்றை மட்டுமே உடைக்க அனுமதிக்கிறது.
சோதனை செய்யும் அதிகாரம்
இந்த புதிய மசோதா மூலம் ஏப்ரல் 1 2026 முதல், கூடுதலாக தனிநபரின் மின்னஞ்சல், சமூகவலைதள கணக்குகள், வங்கி விவரங்கள், முதலீட்டு கணக்குகள் உள்ளிட்டவற்றை தனிநபரின் அனுமதியின்றி அணுகுவதற்கான அதிகாரத்தை அதிகாரிகளுக்கு வழங்குகிறது.
இந்த அதிகாரம், கூடுதல் மற்றும் இணை இயக்குநர்கள், கூடுதல் மற்றும் துணை ஆணையர்கள், ஆணையர்கள், வருமான வரி அதிகாரிகள் மற்றும் வரி வசூல் அதிகாரிகள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தனிநபர் ஒருவர் வரி ஏய்ப்பு செய்ததாக சந்தேகம் இருந்தாலோ, தங்கள் உள்ளிட்ட வரி விதிக்க கூடிய சொத்து விவரங்களை கணக்கில் காட்டாமல் இருந்தாலோ அவரின் டிஜிட்டல் கணக்குகளை சோதனை செய்ய இந்த விதி வழிவகுக்கிறது.
இந்த மசோதா இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள தனிநபரின் கருத்து சுதந்திரம், அந்தரங்க ரகசியங்களையும் பாதுகாக்க உரிமை ஆகியவற்றை மீறுவதாக கருதப்படுகிறது.