;
Athirady Tamil News

ஹமாஸுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை

0

காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை விடுவிக்குமாறு ஹமாஸுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் “இறுதி எச்சரிக்கை” விடுத்துள்ளார்.

பணயக்கைதிகள் தொடர்பாக ஹமாஸுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்திய சில மணி நேரங்களுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வந்தது. வொஷிங்டன் இதுவரை அந்தக் குழுவுடன் நேரடி ஈடுபாட்டைத் தவிர்த்து வருகிறது.

மேலும் பயங்கரவாத அமைப்புகளாக அது பட்டியலிடும் நிறுவனங்களுடன் நேரடி தொடர்பு கொள்வதற்கு எதிரான நீண்டகால அமெரிக்கக் கொள்கை உள்ளது.

இது குறித்து ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில், பணயக்கைதிகள் அனைவரையும் இப்போதே விடுவித்து விடுங்கள், நீங்கள் கொலை செய்தவர்களின் அனைத்து இறந்த உடல்களையும் உடனடியாகத் திருப்பித் தரவும், நான் சொல்வது போல் நீங்கள் செய்யாவிட்டால் ஒரு ஹமாஸ் உறுப்பினரும் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள் – என்று எச்சரித்தார்.

மேலும், காசா மக்களுக்கும் ஒரு அழகான எதிர்காலம் காத்திருக்கிறது என்று சுட்டிக்காட்டிய அமெரிக்க ஜனாதிபதி நீங்கள் பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் அந்த நிலை மாறிவிடும் என்றும் குறிப்பிட்டார்.

ட்ரம்ப், ஹமாஸை அச்சுறுத்துவது இது முதல் முறை அல்ல. டிசம்பரில், அவர் பதவியேற்பதற்கு முன்பாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கிடையில், பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக அமெரிக்கா ஹமாஸுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதை வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் உறுதிப்படுத்தினார். பேச்சுவார்த்தைக்கு முன்னர் இஸ்ரேலுடன் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

காசாவில் இன்னும் 59 பணயக்கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது, மேலும் 24 பேர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. கைதிகளில் அமெரிக்க குடிமக்களும் உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.