;
Athirady Tamil News

பிரதமரின் நிகழ்ச்சிக்கு முதல்முறையாக பாதுகாப்புப் பணியில் முழுவதும் பெண்கள்!

0

முதல்முறையாக பிரதமர் மோடி கலந்துகொள்ளும் ஒரு நிகழ்ச்சிக்கு முழுவதுமாக பாதுகாப்புப் பணியில் பெண்கள் ஈடுபடவுள்ளனர்.

உலக மகளிர் நாளையொட்டி குஜராத் மாநிலம் நவ்சரி மாவட்டத்தில் நாளை(மார்ச் 8) நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பெண்கள் மத்தியில் உரையாற்றவிருக்கிறார்.

குஜராத்திற்கு பிரதமர் மோடி வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த விழாவிற்கான பாதுகாப்புப் பணிகளில் முழுவதுமாக காவல்துறையைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஈடுபடவுள்ளனர்.

பிரதமர் மோடி வருகை முதல் அவர் கலந்துகொள்ளும் விழா நிறைவுபெறும் வரை பெண் காவலர்கள் பணியில் ஈடுபட உள்ளதாக குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘உலக மகளிர் நாளையொட்டி, இந்தியாவிலேயே முதல்முறையாக குஜராத் காவல்துறை ஒரு புதிய முயற்சியை முன்னெடுக்கிறது. அதன்படி பிரதமர் மோடி கலந்துகொள்ளும் விழாவுக்கு முழுவதுமாக பெண் அடங்கிய குழு பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளது.

2,100-க்கும் மேற்பட்ட காவலர்கள், 187 உதவி ஆய்வாளர்கள், 61 ஆய்வாளர்கள், 16 டிஎஸ்பி, 5 எஸ்பிக்கள், ஒரு ஐ.ஜி., ஒரு கூடுதல் டிஜிபி அந்தஸ்து அதிகாரி என அனைவரும் பெண்கள்” என்றார்.

குஜராத் மற்றும் தாத்ரா நகர் ஹவேலிக்கு பிரதமர் மோடி இருநாள் (மார்ச் 8,9) பயணமாக செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.