கர்நாடகாவில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான இஸ்ரேலியர் உள்பட 2 பெண்கள்

பெங்களூரு: கர்நாடகாவின் ஹம்பி அருகே துங்கபத்ரா ஆற்றங்கரையில் பொழுதை கழித்துக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளில் 2 பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச புராதனச் சின்னங்கள் நிறைந்த ஹம்பி அருகே துங்கபத்ரா இடதுகரை கால்வாய் அருகே 2 பெண்கள் 3 ஆண்கள் என 5 பேர், கடந்த வியாழக்கிழமை இரவு நட்சத்திரங்களை பார்த்தவாறு பொழுதை கழித்துக்கொண்டிருந்துள்ளனர். இரண்டு பெண்களில் ஒருவர், 27 வயதான இஸ்ரேல் நாட்டவர் என்றும், 29 வயதான மற்றொருவர் இந்தியாவைச் சேர்ந்த தங்கும் விடுதி உரிமையாளர் என்றும் தெரியவந்துள்ளது. மூன்று ஆண்களில் டேனியல் என்பவர் அமெரிக்காவையும், பங்கஜ் என்பவர் மகாராஷ்டிராவையும், பிபாஷ் என்பவர் ஒடிசாவையும் சார்ந்தவர்.
அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர், இவர்களிடம் பெட்ரோல் எங்கே கிடைக்கும் என கேட்டுள்ளனர். பின்னர், ரூ.100 கேட்டுள்ளனர். பணம் கொடுக்க அவர்கள் மறுத்ததை அடுத்து, சுற்றுலாப் பயணிகளில் 3 ஆண்களையும் கால்வாயில் தள்ளி உள்ளனர். மேலும், 2 பெண்களையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
கால்வாயில் தள்ளப்பட்ட 3 ஆண்களில் டேனியல் மற்றும் பங்கஜ் ஆகியோர் நீந்தி கரையேறி வந்துள்ளனர். ஆனால், பிபாஷ் நீரில் மூழ்கி உள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீ அணைப்பு மற்றும் காவல்துறையினர், பிபாஷை தேடினர். இந்நிலையில், இன்று(சனிக்கிழமை) காலை அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், குற்றவாளிகளை கைது செய்ய 2 தனிப்படைகளை அமைத்து தேடி வருகின்றனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கொப்பல் காவல் கண்காணிப்பாளர் ராம் அரசிட்டி, “சானாபூர் அருகே ஐந்து பேர் – இரண்டு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் – தாக்கப்பட்டனர். அவர்களில் இருவர் வெளிநாட்டினர். ஒருவர் அமெரிக்கர், மற்றொருவர் இஸ்ரேலைச் சேர்ந்த பெண். தாக்கப்பட்டதைத் தவிர, இரண்டு பெண்களும் குற்றம் சாட்டப்பட்டவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார் அளித்துள்ளனர்.
பெண்கள் இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் விரும்பினால் அவர்களை தனியார் மருத்துவமனைக்கு மாற்றலாம். புகாரின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை, கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொள்ளை குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் புகார் அளித்ததை அடுத்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இரண்டு சிறப்பு குழுக்கள் இந்த வழக்கை விசாரித்து வருகின்றன. பாலியல் வன்கொடுமையை உறுதிப்படுத்த பெண்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.”என தெரிவித்தார்.