;
Athirady Tamil News

கடவுள் இருக்கிறார்.. ஹார்வர்டு பல்கலை. வானியற்பியல் நிபுணர் கண்டுபிடிப்பு

0

வில்லி சூன் என்ற மலேசியா நாட்டைச் சேர்ந்த, ஹார்வர்டு பல்கலை. வானியற்பியல் விஞ்ஞானி, கடவுள் இருக்கிறார் என்பதை சில கணித வழி முறைகளையும் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் மேற்கோள்காட்டி விளக்கியிருக்கிறார்.

இந்த கண்டுபிடிப்புகள் இன்னமும் முழுமையடையாத நிலையில், அவர் கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிப்பதற்கான பல்வேறு ஆராய்ச்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

மேலும், சில வேளைகளில், மனிதர்கள், நமக்கு அப்பாற்பட்ட இயற்கை சக்திகளுக்கு அடிபணிந்து, வாழ்க்கையை வழிநடத்தவும் தங்களது வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்படவும் அனுமதிக்கத்தான் வேண்டும் என்று அவர் நம்புவதாகக் குறிப்பிடுகிறார்.

ஏற்கனவே, கடவுளை வைத்து அரசியல் நடந்து வரும் நிலையில், இவரது கூற்று நிச்சயம் மத மோதல்களை ஏற்படுத்திவிடக் கூடாது என்றுதான் அவர் இருப்பதாக நிரூபிக்கும் கடவுளும்கூட விரும்புவார்.

பல்வேறு கணிதக் கோட்பாடுகளையும், அறிவியல் ஆய்வுகளின் மூலமும், மனித சக்திக்கு அப்பாற்பட்ட இயற்கை சக்தி ஒன்று இருப்பதாகவும், பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கண்டுபிடிப்புகளின் மூலம் கிடைத்த ஆய்வு முடிவுகளையும் மேற்கோள்காட்டி, வில்லி சூன் தனது வாதத்துக்கு ஆதாரங்களையும் சேர்த்துள்ளார்.

டக்கர் கார்ல்சன் நெட்வொர்க் என்ற ஊடகத்துக்கு அவர் கடநத் ஆண்டு அளித்த நேர்காணல் ஒன்றில், பிரிட்டிஷ் இயற்பியலாளர் பால் டிராக் என்பவர், கடந்த 1928ஆம் ஆண்டே, “கடவுள்” இருப்பைக் குறிப்பிட்டிருப்பதையும், எலக்ட்ரானுக்கு இணையான ஒரு சக்தி இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருப்பதாகக் கூறியுள்ளார்.

இந்த கண்டுபிடிப்பு நடந்து சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1932 ஆம் ஆண்டில், கார்ல் ஆண்டர்சன் என்பவர், பாசிட்ரான் என்ற ஒன்றைக் கண்டுபிடித்தார், இது ஒரு எலக்ட்ரானைப் போலவே நிறை கொண்ட ஆனால் நேர்மறை மின்னூட்டம் கொண்ட ஒரு துகள்தான் அது.

வில்லி சூன், இதனை மிகவும் அற்புதமானது என்றும், எந்தவொரு சோதனையும் நடத்தி அதனை உறுதிப்படுத்துவதற்கு முன்பு, அதன் இருப்பைக் கணிக்கும் பால் டிராக்-கின் திறனையும் இங்கே அவர் சுட்டிக்காட்டுகிறார்.

கணிதத்தில், ஜியோமெட்ரிக் பற்றி விளக்கும் வில்லி சூன், குறிப்பாக, ஈர்ப்பு விசை இல்லாமல், விண்வெளிநேரத்தில் மூடிய இடத்தில் இருக்கும் வளைவு என்ற கருத்து, உண்மையான கணிதம் என்பது எவ்வாறு உலகத்துடன் தொடர்புடையது என்பதை புரிந்துகொள்வதில் இருக்கும் நீண்ட கால சவாலைத்தான் நிரூபிப்பதாகவும் குறிப்பிடுகிறார். பல்வேறு ஆய்வுகள் இந்த விவகாரத்தை மிக விரிவாக ஆராய்ந்துள்ளன என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இறுதியாக வில்லி சூன் தனது கண்டுபிடிப்பு குறித்த தகவலை இவ்வாறு நிறைவு செய்கிறார், அதாவது, இதுபோன்ற எண்ணற்ற உதாரணங்களும் சம்பவங்களும் ஏற்கனவே நடந்திருக்கின்றன. எனவே நாம் நம் வாழ்வில், கண் முன் இல்லாத எப்போதும் இருக்கும் ஒரு சக்தி நமது வாழ்வில் வெளிச்சம் பாய்ச்சும்போது, அதன் முன் தலைவணங்கியிருக்கிறோம், பெருமூச்சு விட்டிருக்கிறோம் அந்த வெளிச்சத்தைப் பாய்ச்சியது கடவுள்தான். எனவே நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், அந்த ஒளியைப் பின்பற்றுவதுதான் என்று கூறி முடிக்கிறார்.

ஆனால் கூடுதலாக ஒன்றையும் அவர் சொல்லியிருக்கிறார்.. கார்பன்-டைஆக்ஸைடு உமிழ்வைக் குறைப்பது இயற்கைக்கு எதிரானது என்றும் வில்லி சூன் கூறுகிறார். புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க அல்லது கார்பன்-டைஆக்ஸைடு அளவைக் குறைக்க வாதிடுபவர்களுக்கு ஒரு கேள்வையும் வைத்திருக்கிறார். அதாவது, “நீங்கள் யார் இதனை முடிவு செய்ய? பூமியைக் காப்பாற்ற இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது?” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

கடவுளை விடவும், கார்பன்-டைஆக்ஸைடு கருத்துக்குத்தான் அதிக சர்ச்சை கிளம்பும் என்று கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.