;
Athirady Tamil News

காய்ச்சல் இல்லை; ரத்தத்தில் சீரான ஆக்சிஜன்: போப் உடல் நிலை குறித்து வாடிகன்!

0

போப் பிரான்சிஸுக்கு காய்ச்சல் இல்லை என்றும் அவரின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு சீராக இருப்பதாகவும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) வாடிகன் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்துவருவதால், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவருவதாகவும் வாடிகன் குறிப்பிட்டுள்ளது.

நான்காவது ஞாயிற்றுக்கிழமையாக அவர் இல்லாமல் புனித ஆண்டுப் பணிகளை வாடிகன் கத்தோலிக்க திருச்சபை மேற்கொண்டுள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88), சுவாசக் கோளாறு காரணமாக பிப். 14ஆம் தேதி ரோம் நகரிலுள்ள ஜெமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 4 வாரங்களாக மருத்துவமனையில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அவருக்கு ஆண்டிபயோடிக் மருந்துகள் அளிக்கப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

மார்ச் 3ஆம் தேதி போப் பிரான்சிஸுக்கு உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதால், வென்டிலேட்டருக்கு மாற்றப்பட்டு அதன் உதவியுடன் சுவாசித்ததாக வாடிகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே நான்காவது வாரமாகத் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்துவரும் போப் பிரான்சிஸ் குறித்து வாடிகன் நல்ல தகவல்களை வெளியிட்டுள்ளது.

போப் பிரான்சிஸ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது; தற்போது சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாகவும், காய்ச்சல் நீங்கி அவரின் ரத்தத்தின் ஆக்சிஜன் அளவு சீராக உள்ளதாகவும் வாடிகன் குறிப்பிட்டுள்ளது.

வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆசிர்வாதக் கூட்டத்தில், போப் பிரான்சிஸுக்கு பதிலாக அவரின் நெருங்கிய நண்பரான கனடாவைச் சேர்ந்த கார்டினல் மைக்கேல் ஸெர்னி ஆசிர்வாதக் கூட்டங்களை நடத்தி வருகிறார். வாடிகன் திருச்சபையின் அன்றாட திருப்பணிகளும் போப் இல்லாமல் நடைபெற்று வருவதாக வாடிகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.