;
Athirady Tamil News

தெற்கு சூடானில் படைகளை இறக்கிய உகாண்டா!

0

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் உகாண்டா நாட்டு படைகள் தரையிறக்கப்பட்டுள்ளதாக உகாண்டாவின் ராணுவத் தளபதி முஹூசி கைனெருகபா தெரிவித்துள்ளார்.

தெற்கு சூடான் நாட்டு அதிபர் சால்வா கீர் மற்றும் அவரது துணை அதிபரான ரெயிக் மச்சார் ஆகியோருக்கு இடையிலான உறவில் விரிசல் உண்டானதினால், அங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தம் முறிந்து மீண்டும் மோதல் வெடிக்கும் அபாயம் நிலவி வருகின்றது.

இந்நிலையில், அண்டை நாடான உகாண்டாவின் ராணுவம் தெற்கு சூடான் தலைநகர் ஜீபாவில் அதிபர் சால்வாவிற்கு உதவுவதற்காக தரையிறக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்று.

இதற்கான காரணம் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி ஜென்ரல் முஹூசி கூறுகையில், அதிபர் சால்வாவிற்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும் உகாண்டா மீதான போராகக் கருதப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், தெற்கு சூடானை தங்களுடைய நாடு போல பாதுகாப்போம் எனவும் அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

இருப்பினும், இந்த நடவடிக்கை குறித்து தெற்கு சூடானின் அரசு தரப்பில் எந்தவொரு கருத்தும் தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக, கடந்த வாரம் துணை அதிபர் மச்சாரின் கூட்டாளிகளான அந்நாட்டு ராணுவத் துணைத் தளபதி மற்றும் 2 அமைச்சர்கள் ஆகியோர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்தரப்பில் கடுமையான கண்டங்கள் எழுந்ததைத் தொடர்ந்து ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கைகள் அனைத்தும் மேல் நைல் மாநிலத்தில் அரசுப் படைகளுக்கும் வெள்ளை இராணுவம் என்று அழைக்கப்படும் ஒரு போராளிக் குழுவிற்கும் இடையே ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன.

இதனால், கடந்த மார்ச்.8 அமெரிக்கா தெற்கு சூடானில் பணிப்புரியும் அமெரிக்கர்களில் அவசரக்கால ஊழியர்களை தவிர மற்றவர்கள் அனைவரையும் உடனடியாக வெளியேற உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.