;
Athirady Tamil News

புது வருட போனஸ் வழங்க முடியாது; டிரம்ப் வரியால் இலங்கை ஆடைத் தொழிற்சாலையில் பதற்றம்!

0

புது வருட போனஸ் வழங்க முடியாது எனத் தெரிவித்ததை அடுத்து, மாத்தறை, வெலிகம, உடுகாவ பகுதியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் நிர்வாக அதிகாரி ஒருவரை சக ஊழியர்கள் நேற்று (08) இரவு வீட்டுக் காவலில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை தொழிற்சாலையின் நுழைவு வாயிலை பூட்டி முற்றாக அடைத்து, போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், நிர்வாகத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஊழியர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே வாக்குவாதம்
அமெரிக்காவால் இலங்கை மீது விதிக்கப்பட்ட சுங்கவரி காரணமாக , தொழிற்சாலை நிர்வாகம் போனஸ் வழங்கப்படாது என அறிவித்ததைத் தொடர்ந்து, ஊழியர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், “புது வருட போனஸ் வழங்கப்படும் வரை இங்கிருந்து நகர மாட்டோம்” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, தொழிற்சாலை நிர்வாகம் வெலிகம பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்ததைத் தொடர்ந்து, சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு அப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும் , இன்று (09) காலை வரை தொழிலாளர்கள் தொழிற்சாலையின் நுழைவு வாயிலை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதாக அத தெரண நிருபர் தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44% சுங்கவரி விதிக்க முடிவு செய்து, கடந்த ஏப்ரல் 02 அன்று அறிவித்தார்.

இந்த சுங்கவரி ஏப்ரல் 05 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் இதன் தாக்கம் ஆடைத் தொழிற்துறையை பெரிதும் பாதித்துள்ளதாகவும், இதனால் போனஸ் உள்ளிட்ட நிதி உதவிகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் கூறியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.