;
Athirady Tamil News

பெற்றோா் விவாக ரத்து: குழந்தைக்கு பயணத் தடை விதித்த துபை நீதிமன்றம்: உச்சநீதிமன்றம் கண்டனம் ‘

0

‘கணவன்-மனைவி இடையேயான பிரச்னைக்காக குழந்தைக்கு பயணத் தடை விதித்த துபை நீதிமன்றத்தின் உத்தரவு மனித உரிமைகளை மீறும் செயல்’ என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

விவாகரத்து ஆன இந்திய மனைவியிடமிருந்து குழந்தையை மீட்டு தன்னிடம் ஒப்படைக்குமாறு கானா நாட்டைச் சோ்ந்த நபா் தாக்கல் செய்த ஆள்கொணா்வு மனு மீதான விசாரணையின்போது உச்சநீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது.

கடந்த 2018, ஏப்.19-இல் துபையில் வசிக்கும் கானா நாட்டைச் சோ்ந்த நபா் ஒருவா் பெங்களூரைச் சோ்ந்த பெண்ணை வெளிநாட்டு திருமண சட்டம் 1969-இன்கீழ் திருமணம் செய்து, அதை துபையில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் பதிவு செய்துள்ளாா்.

அந்த தம்பதிக்கு கடந்த 2019, ஜன.24-இல் குழந்தை பிறந்ததையடுத்து 2021 வரை துபையில் வசித்து வந்தனா்.

அதன் பிறகு குழந்தையுடன் பெங்களூருக்கு அந்த பெண் வந்துள்ளாா். இந்நிலையில், துபை குடும்பநல நீதிமன்றம் மூலம் அப்பெண்ணின் கணவா் விவாகரத்து பெற்றாா். குழந்தையை கணவரிடம் ஒப்படைக்க வேண்டும் என துபை நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் துபை நீதிமன்ற உத்தரவின்படி குழந்தை துபையில் இருந்து பயணிக்க தடை விதித்திருப்பதாகவும் அதை மீறி இந்தியாவுக்கு முன்னாள் மனைவி குழந்தையை அழைத்துச் சென்ாக கூறி கா்நாடக உயா்நீதிமன்றத்தில் அந்த நபா் ஆள்கொணா்வு மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனுவில் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவா் குறிப்பிட்டாா்.

இந்த குற்றச்சாட்டை மறுத்த மனைவி, முன்னாள் கணவரால் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டதால் குழந்தையுடன் இந்தியா வந்ததாக கூறினாா். தானும் முன்னாள் கணவரும் கிறிஸ்தவா்களாக இருக்கும் நிலையில், ஷரியா சட்டத்தின்கீழ் குழந்தையை முன்னாள் கணவரிடம் ஒப்படைக்கக் கூறும் துபை நீதிமன்ற உத்தரவு தங்களுக்குப் பொருந்தாது எனவும் அவா் உயா்நீதிமன்ற விசாரணையில் தெரிவித்தாா்.

இதையடுத்து, இந்த மனு மீது தாங்கள் முடிவெடுக்க முடியாது எனவும் உள்ளூா் குடும்பநல நீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும் எனவும் கா்நாடக உயா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் முன்னாள் கணவா் மனுதாக்கல் செய்தாா். இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்யகாந்த் மற்றும் என்.கோடீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: திருமண விவகார வழக்கில் குழந்தைக்கு பயணத் தடை விதிப்பது எவ்வித குற்றமும் புரியாத ஒருவரை வீட்டுக்காவலில் வைப்பதற்கு சமமாகும். மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் எந்த நீதிமன்றமும் இதுபோன்ற உத்தரவை பிறப்பிக்காது.

கணவன்-மனைவி இருவரும் கிறிஸ்தவ மதத்தை சோ்ந்தவா்களாக இருக்கும்போது ஷரியா சட்டத்தின்கீழ் துபை குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது எப்படி?

இந்த வழக்கில் குழந்தையின் நலனுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தை உள்ளூா் குடும்பநல நீதிமன்றம் கையாள வேண்டும் என்ற கா்நாடக உயா் நீதிமன்றத்தின் உத்தரவு சரியானது என்றனா்.

இதைத்தொடா்ந்து, மனுதாரருக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய பயண உரிமைகள் வழங்க நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் அமா்வு கடந்த 17-ஆம் தேதி உத்தரவிட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.