பிப்ரவரியில் திருமணமான உ.பி. இளைஞர் பஹல்காம் தாக்குதலில் உயிரிழப்பு

கான்பூர்: பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதலில் உ.பி.யின் கான்பூரை சேர்ந்த சுபம் துவிவேதி என்ற இளைஞரும் உயிரிழந்தார். இவருக்கு கடந்த பிப்ரவரி 12-ம் தேதி, அதாவது 2 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் ஆகியிருந்தது. இந்நிலையில் இவர் சிலநாள் விடுமுறையில் தனது மனைவியுடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தார். துரதிருஷ்டவசமாக அவரது பயணம் ஒரு கனவாக மாறியது.
இதுகுறித்து அவரது சகோதரர் சவுரப் துவிவேதி கூறுகையில், “ எனது சகோதரர் தலையில் சுடப்பட்டு இறந்ததாக அவரது மனைவி எங்களிடம் தெரிவித்தார்.” என்றார். மகாராஷ்டிர மாநிலம் பான்வெல் பகுதியை சேர்ந்த திலீப் தேசாலே, ஒடிசாவை சேர்ந்த அக்கவுன்ட்ஸ் அதிகாரி பிரசாந்த் சபாபதி, குஜராத்தின் சூரத் நகரை சேர்ந்த சைலேந்திர கடாதியா உள்ளிட்டோரும் பஹல்காம் தாக்குதலில் இறந்தனர்.
பிரசாந்த் சபாபதி தனது மனைவி மற்றும் மகனுடன் காஷ்மீருக்கு சென்றிருந்தார். இந்நிலையில் பிரசாந்த் இறந்துவிட்டதாக எங்களுக்கு தகவல் வந்தது. அவரது மனைவி மற்றும் மகன் குறித்து தகவல் இல்லை என ஒடிசாவில் உள்ள அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.