;
Athirady Tamil News

அனைத்து மக்களுக்கும் சமவுரிமை வழங்குவோம் – ஜனாதிபதி அநுர கிளிநொச்சியில் தெரிவிப்பு

0

இலங்கையில் அனைத்து இன மக்களாலும் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கமாக எமது அரசாங்கம் மட்டுமே காணப்படுகின்றது. ஆதலால், நாங்கள் அனைத்து மக்களுக்குமான சம உரிமைகளை உறுதிப்படுத்துவோம் – இவ்வாறு ஜனாதிபதி அநுர தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு, கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் நேற்று(26) நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுர கலந்துகொண்டு உரையாற்றினார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
கடந்த வருடம் செப்ரெம்பர் மாதம் எமது நாட்டில் மிகப்பெரும் அரசியல் மாற்றம் ஏற்பட்டது. குடும்ப ஆட்சிகள் அனைத்தும் முடிவுக்கு வந்தன. அதைத் தொடர்ந்து, வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அனைத்து மக்களின் அன்பையும், நம்பிக்கையையும் பெற்ற நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டது. கிளிநொச்சி உட்பட வடக்கு மக்கள் அனைவரும் ஆதரவை வழங்கி எம்மைத் தெரிவுசெய்தனர்.

எமது வெற்றியின் மூலம் நாட்டில் பிரிவினைவாத அரசியல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது ஒருதாய் மக்களாக நாங்கள் நாட்டை மேம்படுத்தி வருகின்றோம். மே மாதம் இடம்பெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தியை மக்கள் வெற்றியடையச் செய்ய வேண்டும். உங்கள் பிரதேசம் செழிப்பான அபிவிருத்தியைக் காணவேண்டும். அதற்கு தேசிய மக்கள் சக்தியினர் உள்ளூரட்சிகளில் ஆட்சியமைக்க வேண்டியது அவசியம்.
இப்போது நாங்கள் அதிகாரத்தில் உள்ளோம். நிச்சயம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்போம். வனப் பாதுகாப்புத் திணைக்களம் கையகப்படுத்தியுள்ள காணிகளை உரிய ஆய்வின் பின்னர் விடுவிப்போம். பாதைகளைத் திறந்துள்ளோம். தொடர்ச்சியான நடைமுறைகள் ஊடாக மக்களின் காணிகளை மக்களிடம் ஒப்படைப்போம் – என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.