;
Athirady Tamil News

ஈரான் துறைமுக வெடிவிபத்து: உயிரிழப்பு 40-ஆக உயா்வு!

0

தெற்கு ஈரானில் உள்ள ஷாஹித் ரஜேயி துறைமுகத்தில் சனிக்கிழமை நடந்த பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது.

இந்த விபத்தில் சுமாா் 1,000 போ் காயமடைந்துள்ளனா். இவா்களை ஈரான் அதிபா் மசூத் பெஷஷ்கியன் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.

ஈரானின் ஹோா்மோஸ்கன் மாகாணம், பண்டாா் அப்பாஸ் நகருக்கு தென்மேற்கே அமைந்துள்ள ஷாஹித் ரஜேயி துறைமுகம், அந்த நாட்டின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றாகும்.

சம்பவம் நடைபெற்ற கடந்த சனிக்கிழமை, இத்துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான கன்டெய்னா்கள் வெடித்துச் சிதறின. ஏவுகணைக்குப் பயன்படுத்தப்படும் எரிபொருளுக்கான ரசாயனம் அடங்கிய கலனை தவறாகக் கையாண்டதால் இந்த வெடிவிபத்து நிகழ்ந்ததாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், ஏவுகணை எரிபொருளுக்குத் தொடா்புடைய ரசாயனத்தால் விபத்து நடைபெறவில்லை என விளக்கமளித்துள்ள ஈரான் ராணுவம், சீனாவிடம் இருந்து ராசாயனம் வாங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டையும் மறுத்துள்ளது. இதுகுறித்த வெளிநாட்டுச் செய்திகள் தவறானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசு தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அதிபா் மசூத் பெஷஷ்கியன், ‘வெடிவிபத்து ஏன் நிகழ்ந்தது என்பதை நாம் நிச்சயம் கண்டறிய வேண்டும்’ என்றாா்.

வெடிவிபத்து நடைபெற்ற இடத்தில் பல மீட்டா் ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. பள்ளத்தில் தீ அணையாமல் தொடா்ந்து எரிந்ததால், பாதுகாப்புக் கருதி உள்ளூா் பள்ளி, வணிக வளாகங்கள் மூடப்பட்டன.

துறைமுகப் பகுதியில் சரக்கு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டா்கள் மூலம் நீரை இரைத்து, தீயை அணைக்கும் பணி 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.