கோயில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி!

கோவாவில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவா மாநிலம் ஷிர்காவ் கிராமத்தில் உள்ள லைராய் தேவி கோயிலில் புகழ்பெற்ற ‘ஜாத்ரா’ என்று கூறப்படும் திருவிழா நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. வழக்கம்போல ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த டிரோன்களும் பயன்படுத்தப்பட்டன.
எனினும் இன்று(சனிக்கிழமை) காலை பக்தர்கள் ஒரு சரிவான பாதையில் வந்துகொண்டிருந்தபோது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 50 -க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.