;
Athirady Tamil News

இந்திய பாதுகாப்புத்துறை இணையதளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் சைபர் தாக்குதல்!

0

இந்திய பாதுகாப்புத்துறை இணையதளங்களைக் குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்திய பாதுகாப்புத்துறையின் முக்கிய இணையதளங்களைக் குறிவைத்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள்(இணையவழி குற்றவாளிகள்) சைபர் தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்திய பாதுகாப்புத் துறையின் ரகசிய தரவுகள் பல திருடப்பட்டிருக்குமோ என்கிற சந்தேகமும் வலுத்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாதுகாப்புத் துறை வட்டாரங்களிலிருந்து வெளியாகியுள்ள தகவலின்படி, பாதுகாப்புப்படை வீரர்களைப் பற்றியும் அவர்களது பின்புலம் மற்றும் பிற முக்கிய விவரங்களைப் பற்றியும் பொதுவெளியில் கசியக் கூடாத தரவுகளின் பாதுகாப்பு இப்போது கேள்விக்குறியாகியிருப்பதாக தெரிய வந்துள்ளது.

‘ராணுவ பொறியியல் சேவைகள்’ மற்றும் ‘மனோஹர் பரிக்கர் பாதுகாப்பு விவகார படிப்புகள் மற்றும் ஆய்வுக்கான நிறுவனம்’ ஆகியவற்றின் தரவுகளைத் திருட்டுத்தனமாக அறிந்துகொள்ள பாகிஸ்தான் ஹேக்கர்கள் இணையவழியில் ஊடுருவியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பாதுகாப்புத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான, ‘ஆர்மர்ட் வெஹிகிள் நிகாம் லிமிடட்’ இணையதளத்தையும் முடக்க முற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட இணையவழி ஊடுருவல், அச்சுறுத்தல் செயல்களில் ‘பாகிஸ்தான் சைபர் படை’ என்கிற எக்ஸ்(ட்விட்டர்) சமூக வலைதளப் பக்கத்திலிருந்து ஈடுபட்டிருப்பதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கண்ட எக்ஸ் தள கணக்கு, இந்தியாவில் முடக்கப்பட்டுள்ள நிலையில், அதன் முகப்பு பக்கத்தில், இந்திய பாதுகாப்புப் படையின் இணையதளத்திலிருந்து திருடப்பட்ட படத்தை ஹேக்கர்கள் பதிவிட்டுள்ளனர். முன்னதாக, அதில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் ராணுவ டாங்கியின் நீக்கப்பட்டிருப்பதுடன் இப்போது இந்திய ராணுவ டாங்கியின் படம் பதிவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இணையவழியில் இதுபோன்ற சைபர் தாக்குதல்கள் நடைபெறாமல் தடுத்தும் கண்காணித்தும் வருவதாகவும், இந்த பணியில் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரிலுள்ள பஹல்காமில் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இந்தியா – பாகீஸ்தான் இடையே போர் மூளுமோ என்னும் பதற்றம் நீடிக்கிறது. இந்தநிலையில், இந்திய பாதுகாப்புத்துறை இணையதளங்களைக் குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.