;
Athirady Tamil News

ஆப்கன் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பாக். குற்றச்சாட்டு: தலிபான் அரசு மறுப்பு

0

ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிக்குள்ளும் நுழைந்து இந்தியா ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறியிருந்த குற்றச்சாட்டு உண்மையல்ல என்று ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் இனயதுல்லா கவாரிஸ்மி இது குறித்து பேசுகையில், ஆப்கன் மண்ணிலும் இந்தியா ஏவுகணைகளை வீசியதாக பாகிஸ்தான் கூறும் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று ஹுரியத் வானொலியில் தெரிவித்துள்ளார்.

அந்தக் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி வந்து இந்திய முப்படைகளின் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறியிருந்த பாகிஸ்தான் ராணுவம், தான் கூறிய பொய்யை உண்மையாக்க இந்தியாவின் தாக்குதல் எல்லையைத் தாண்டி ஆப்கன் மண்ணிலும் ஏவுகணைகள் வீசப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தது.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் அரசு மறுத்துள்ளது. பாகிஸ்தான் சொல்வது போல ஆப்கன் மண்ணில் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படவில்லை என்று கூறியிருக்கிறது.

ஏற்கனவே, இது குறித்து இந்தியாவின் வெளியுறவு விவகாரத் துறை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், பாகிஸ்தான் குற்றச்சாட்டு உண்மையல்ல என்றும், ஆப்கானிஸ்தானுக்கு தனது கூட்டாளி யார், எதிரி யார் என்று நன்கு தெரியும் எனவும் கூறியிருந்தது.

இந்தியாவுக்கு எதிராக பொய்யான தகவல்களை பாகிஸ்தான் பரப்பி வருவதாகவும் மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தலிபான் அரசின் இந்த விளக்கம் வந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.