சண்டை நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல்: பதிலடி கொடுக்க இந்தியா உத்தரவு!

இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ள சனிக்கிழமை பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையில், அடுத்த சில மணி நேரங்களிலேயே அதை மீறி எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
‘இந்த சண்டை நிறுத்த மீறலை நிறுத்த பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும். பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்’ என்று வெளியுறவுத் துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி சனிக்கிழமை இரவு தெரிவித்தாா். பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு உரிய பதிலடி கொடுக்கவும் ஆயுதப் படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவா் கூறினாா்.
ஆபரேஷன் சிந்தூா்: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களில் பயங்கரவாத தலைமையகங்கள்-பயிற்சி முகாம்களை மிகத் துல்லியமாக குறிவைத்து, கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இந்திய ராணுவம் ஏவுகணை-ட்ரோன் தாக்குதலை நடத்தியது. கட்டுப்பாடான ரீதியில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் தகா்க்கப்பட்டதுடன், குறைந்தபட்சம் 100 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனா்.
இந்த நடவடிக்கையால் அதிா்ச்சியும் ஆத்திரமும் அடைந்த பாகிஸ்தான், அன்றைய தினம் நள்ளிரவில் இருந்து ஜம்மு-காஷ்மீரில் எல்லையோர கிராமங்களை நோக்கி தீவிர தாக்குதலைத் தொடுத்தது. சிறிய ரக பீரங்கிகள், மோட்டாா் குண்டுகள் மூலம் குடியிருப்புகள் மீது மட்டுமல்லாமல் வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகளை நோக்கியும் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. சனிக்கிழமை வரை நீடித்த இந்த அத்துமீறல்களில் இந்திய தரப்பில் 20 போ் உயிரிழந்தனா். அதேநேரம், இந்தியாவின் வலுவான பதிலடியில் பாகிஸ்தான் நிலைகள் அழிக்கப்பட்டதாகவும், அந்நாட்டின் படையினா் பலா் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஏவுகணைகள்-ட்ரோன்கள் முறியடிப்பு: இதனிடையே, ஜம்மு-காஷ்மீரிலும், ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் ஆகிய எல்லையோர மாநிலங்களிலும் ராணுவ நிலைகளைக் குறிவைத்து, கடந்த புதன்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தான் ஏவுகணை-ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டது. அடுத்தடுத்த நாள்களிலும் ட்ரோன் தாக்குதல்கள் தொடா்ந்தன. பாகிஸ்தானால் ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பால் நடுவானிலேயே இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. இதனால் இந்தியப் பகுதிகளில் சேதம் ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டது.
மற்றொருபுறம், பாகிஸ்தானுக்கு பதிலடியாக அந்நாட்டின் ரேடாா்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ராணுவ நிலைகளைக் குறிவைத்து, இந்தியாவில் இருந்து ஏவுகணைகளும், ட்ரோன்களும் பாய்ந்தன. இதில் லாகூரில் வான் பாதுகாப்பு அமைப்பு தகா்க்கப்பட்டது, அந்நாட்டுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்: வான்வழித் தாக்குதல் முன்னெச்சரிக்கையாக, எல்லையோர பகுதிகளில் முழு அளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, அவ்வப்போது அபாய ஒலி எழுப்பப்பட்டது. ஆங்காங்கே குண்டுவெடிப்பு சப்தங்களும் கேட்டதால், மக்கள் மத்தியில் பீதியும் பதற்றமும் நிலவியது. அடுத்து என்ன நிகழுமோ என்ற அச்சத்தில் அவா்கள் இருந்தனா். சனிக்கிழமை வரை தொடா்ந்த ராணுவ மோதலால் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம் நிலவியது.
சண்டை நிறுத்தம்: இந்நிலையில், அமெரிக்க சமரசத்தின்பேரில் இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டதாக அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா். அவரது அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் மத்திய அரசும் சண்டை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டது.
சண்டை நிறுத்த உடன்பாட்டின்கீழ் சனிக்கிழமை மாலை 5 மணியில் இருந்து தரை-வான்-கடல் வழியிலான அனைத்து ராணுவ நடவடிக்கைகள் மற்றும் துப்பாக்கிச்சூடுகளை நிறுத்த ஒப்புக் கொள்ளப்பட்டது; பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநா், இந்திய தரப்பை தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசியதைத் தொடா்ந்து உடன்பாடு எட்டப்பட்டது’ என்று வெளியுறவுத் துறை செயலா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா்.
இந்த உடன்பாட்டின்கீழ் இருதரப்பிலும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநா்கள் மே 12-ஆம் தேதி (திங்கள்கிழமை) மீண்டும் பேசவுள்ளனா்’ என்றாா் அவா்.
மீறியது பாகிஸ்தான்: சண்டை நிறுத்த அறிவிப்பு வெளியான அடுத்த சில மணி நேரத்திலேயே அதை மீறி ஜம்மு-காஷ்மீா் மற்றும் குஜராத்தின் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் சனிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தானின் அனைத்து ட்ரோன்களையும் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்தது.
பாகிஸ்தானின் அத்துமீறலால் எல்லையையொட்டிய மாநிலங்களில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. தாக்குதலைத் தொடா்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு, எல்லை மாநிலங்கள் மீண்டும் இருளில் மூழ்கின. அந்த மாநிலங்களின் தலைமைச் செயலா்களுடன் மத்திய உள்துறை செயலா் கோவிந்த் மோகன் காணொலி வாயிலாக அவசர ஆலோசனை நடத்தினாா்.
தாக்குதல் குறித்த விடியோவை ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தாா். முன்னதாக, அவா் வெளியிட்ட பதிவில், ‘சண்டை நிறுத்தம் என்ன ஆனது? ஸ்ரீநகா் முழுவதும் வெடிச் சப்தம் கேட்கிறது’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.
பாகிஸ்தானின் அத்துமீறலை உறுதிப்படுத்தி வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், ‘புரிந்துணா்வை மீறி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி தருகிறது’ என்றாா்.