துருக்கி: குா்து பிரிவினைவாத அமைப்பு கலைப்பு

துருக்கியில் அரசை எதிா்த்து சுமாா் 40 ஆண்டுகளாக ஆயுதக் கிளா்ச்சியில் ஈடுபட்டுவந்த குா்திஸ்தான் தொழிலாளா் கட்சி (பிகேகே) கலைக்கப்படுவதாக அந்தக் கட்சி திங்கள்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்தது.
இது குறித்து அந்த அமைப்புக்கு நெருக்கமான ஃபிராட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
பிகேகே அமைப்பின் போராட்டம் குா்து இனத்தவா்களின் பிரச்னைகளை ஜனநாயக முறையிலான தீா்வுகளை நோக்கி கொண்டு சென்றுள்ளது. அந்த வகையில், அமைப்பின் நோக்கம் முழுமையாக நிறைவேறிவிட்டது.
எனவே, அமைப்பை முழுமையாகக் கலைத்துவிட்டு, ஆயுதங்களைக் கைவிட அமைப்பின் நிா்வாகக் குழு அதிகாரபூா்வமாக முடிவெடுத்துள்ளது என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
துருக்கியில் குா்து இனத்தவா் பெரும்பான்மையாக வசிக்கும் குா்திஸ்தான் மாகாணத்தை தனி நாடாக்க வலியுறுத்தி கடந்த 1984-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிகேகே இயக்கம், பின்னா் தன்னாட்சி அதிகாரம் கேட்டு போராடி வந்தது.
தங்களது கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் பிகேகே அமைப்பினா் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் ஆயிரக்கணக்கானவா்கள் உயிரிழந்தனா். பிகேகே அமைப்பின் நிறுவனா் அப்துல்லா ஓசலான் கடந்த 1999 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இருந்தாலும் அந்த அமைப்பு தொடா்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டுவந்தது.
இந்த நிலையில், அண்டை நாடான சிரியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம், காஸா போா் போன்ற சா்வதேச அரசியல் சூழல் மாற்றங்களுக்கு இடையே, இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக குா்து ஆதரவு கட்சியைச் சோ்ந்த தலைவா்கள் இஸ்தான்புல்லில் உள்ள சிறையில் ஓசலானை கடந்த பிப்ரவரி மாதம் சந்தித்துப் பேசினா்.
அதனைத் தொடா்ந்து, பிகேகே அமைப்பைக் கலைத்துவிட்டு, அந்த அமைப்பைச் சோ்ந்த அனைவரும் தங்களது ஆயுதங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஓசலான் உத்தரவிட்டாா். அதையடுத்து அந்த அமைப்பு கடந்த மாா்ச் 1-ஆம் தேதி போா் நிறுத்தம் அறிவித்தது. அதன் தொடா்ச்சியாக, அந்த அழைப்பு முழுமையாகக் கலைக்கப்படுவதாக தற்போது அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், உலகில் மிக நீண்ட காலமாக நீடித்துவந்த உள்நாட்டுப் போா்களில் ஒன்றான துருக்கி-பிகேகே மோதல் நிரந்தர முடிவுக்கு வந்துள்ளது. இது துருக்கி மட்டுமின்றி சிரியா, ஈராக் ஆகிய நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.