இந்திய மக்களுக்கு மோடி உரை: பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது நாட்டு மக்களுக்கு வழங்கிய உரையின்போது, பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தளங்களை இந்தியா தாக்கிய “ஆபரேஷன் சிந்தூர்” என்பது இந்தியாவின் புதிய உள்நாட்டு பாதுகாப்பு கொள்கையைக் குறிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்துக்கும் பேச்சுவார்த்தைக்கும் இடம் இல்லை, பயங்கரவாதத்துக்கும் வர்த்தகத்துக்கும் இடமில்லை, ரத்தமும் நீரும் ஒன்றாக ஓட முடியாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மே 7 அன்று இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்துரை தொடர்ந்து, அவர் நாட்டு மக்களுக்கு வழங்கிய உரையின்போது இதனை கூறினார்.
இந்தியாவை தாக்கிய பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதக் குழுக்களின் “பயங்கரவாத பல்கலைக்கழகங்களை” இந்தியா துல்லியமாக குறிவைத்து அழித்ததாகவும், இது நாட்டின் புதிய கொள்கையாகவே அமையும் என்றும் மோடி தெரிவித்தார்.
பாகிஸ்தான் முழுமையாக சேதமடைந்த பிறகே அந்நாடு போர்நிறைவு கோரி வேண்டிக் கொண்டதாகவும் அவர் கூறினார்.
“நாம் எச்சரிக்கையாக இருக்கிறோம். எதிர்வரும் நாட்களில் பாகிஸ்தான் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் கண்காணிக்கப்படும். மீண்டும் ஒரு தாக்குதல் ஏற்பட்டால், பதிலடி இந்திய நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இருக்கும்,” என்று மோடி கூறியுள்ளார்.
அவர் தனது உரையில், பயங்கரவாதத்துக்கு வலுவான பதிலடி வழங்கப்படும், அணு அச்சுறுத்தல்களை இந்தியா சகித்துக்கொள்ளாது, பயங்கரவாதிகளை ஆதரிக்கும் அரசு மற்றும் பயங்கரவாதிகள் இடையே வேறுபாடு இல்லை என அவர் திட்டவட்டமாக கூறினார்.
“சிந்தூர் ஆபரேஷன் என்பது வெறுமனே நடவடிக்கை அல்ல, அது கோபத்துடன் கூடிய நீதிக்கான இந்தியாவின் உறுதியான பதில்.” என்று மோடி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தனது பயங்கரவாத முகாம்களை அழிக்க விருப்பமில்லை என்றால், அது தன்னைத் தானே அழித்துக்கொள்வதற்கான பாதையைத் தான் தேர்ந்தெடுக்கும் என்றும் மோடி சவாலாக எச்சரித்துள்ளார்.