;
Athirady Tamil News

அமைதிப் பேச்சுவார்த்தை? உக்ரைன் மீது ரஷியா மீண்டும் தாக்குதல்! 9 பேர் பலி!

0

உக்ரைன் நாட்டில் பயணிகள் பேருந்தின் மீது ரஷிய ட்ரோன்கள் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த 2022-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உக்ரைன் மீதான ரஷியாவின் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் (மே 16) துருக்கியில் நடைபெற்றது.

முதல்முறையாக இருநாட்டு அதிகாரிகளும் நேரில் சந்தித்து நடத்திய இந்தப் பேச்சுவார்த்தை, 2 மணி நேரத்துக்குள் முடிவடைந்தது.

இந்தப் பேச்சுவார்த்தைகள் ஏதேனும் ஓர் மாற்றத்தை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று (மே 17) அதிகாலை உக்ரைனின் சுமி மாகாணத்தின் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

சுமி மாகாணத்தின் பிலோபிலியா நகரத்தில், பேருந்து ஒன்றின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 9 பேர் பலியாகினர். மேலும், 4 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சுமி மாகண நிர்வாகத்தின் தரப்பில் கூறுகையில், இந்தத் தாக்குதல் ரஷியாவின் மற்றொரு போர்க் குற்றம் எனவும், எந்தவொரு ஆபத்தும் விளைவிக்காத மக்கள் போக்குவரத்துப் பேருந்தின் மீது ரஷியா வேண்டுமென்றே தாக்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

முன்னதாக, துருக்கியில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் இருநாடுகளும் சுமார் 1,000 போர்க் கைதிகளை பரிமாறிக் கொள்ள ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இருதரப்புக்கும் இடையில் பல முக்கிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இருப்பினும், ரஷியா முன்வைத்துள்ள கருத்துக்களில், தங்களுக்கு உடன்பாடில்லை என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.